Monday 18 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*வாழ்வின் அர்த்தங்கள்..!!*
பாராட்டப் பழகுங்கள், நாளும் நலமே மலரும்.......
நம்மால் என்ன செய்ய முடியாது? மனம் நினைக்கின்ற அனைத்தையும் செய்து முடிக்க வல்லவர்கள் நாம்.
மனநலம்.
மனித வாழ்க்கை எவ்வளவு மகத்தானது? பல லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் நமக்குக் கிடைத்த அற்புத வாய்ப்பு. நம் உடலும் மனமும் கொண்டுள்ள சக்தி தான் மனித இனத்தை இந்த உலகத்தின் தலைமையாக ஆக்கி உள்ளது.
நம்மால் என்ன செய்ய முடியாது? மனம் நினைக்கின்ற அனைத்தையும் செய்து முடிக்க வல்லவர்கள் நாம்.
‘‘என்னவெல்லாம் இல்லை என்னிடம்’’ என்று பட்டியல் இடுவதற்குப் பதில் ‘‘என்னவெல்லாம் என்னிடம் இருக்கிறது’’ என்று பட்டியல் போட்டால் அது வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றி விடும்.
உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க ஒன்று செய்யலாம். உங்களால் பிறருக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசியுங்கள். கொடுப்பது தான் மன நலத்தைக் காக்கும் பெருமருந்து.
என்ன கொடுக்கலாம்?
ஒவ்வொருவரிடமும் கொடுக்க நிறைய உள்ளது. பெரிதாகப் பணம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை.
பார்வையற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள்.
உங்கள் பணியாளர் குழந்தைகளுக்குப் பாடம் எடுங்கள்.
உறுப்பு தானம் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தாத பல பொருட்களை நல்ல நிலையில் இல்லாதவருக்குக் கொடுக்கலாம்
ஆலயத்தைச் சுத்தப்படுத்தலாம்.
முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் அன்பு பாராட்டலாம்
தேர்வுப் பணம் கட்ட முடியாதவருக்குப் பணம் கட்டலாம்.
மனம் சோர்ந்தவர்களிடம் உற்சாக வார்த்தைகள் பேசலாம். ஆலோசனை சொல்லலாம்.
வசதி உள்ளவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு நிறைய செய்யலாம். கொடுப்பது என்பது தான் முக்கியம். யாருக்கு எதைக் கொடுப்பது என்பது அவரவர் தேர்வுகள்.
கொடுப்பது துக்க நிலையை மாற்றும். துக்கம் சுய நலமான உணர்வு. எனக்கு இது இல்லையே என்ற சுய பரிதாபம் தரும் சோகம் தான் துக்கத்தில் பிரதான பகுதி. தன் மேலுள்ள சிந்தனையை மாற்றப் பிறருக்கு உதவ ஆரம்பியுங்கள். துக்கம் விலகும். புதிய நம்பிக்கைகள் பிறக்கும். பல பிடிமானங்கள் வாழ்க்கையில் உள்ளது தெரியும்.
மனநலம் நன்றாக இருந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும். எனவே நாம் மனதை எப்பொழுதும் நன்றாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். மனநலம் நன்றாக இருக்க
கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.
மற்றவர்களோடு ஒப்பிடுதலைத் தவிர்க்கவும்.
அடுத்தவர்களின் பாராட்டுதலுக்கு ஏங்காதீர்கள்.
தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களின் ரசனைகள் தாம் கடைசி வரை இருக்கும்.
மற்றவர்களைப் பொது இடத்தில பாராட்டுங்கள்.
அடுத்தவரின் குறையை தனிமையில் சொல்லுங்கள்.
திருப்தியுள்ள மனதுக்கு துக்கமில்லை.
இந்த வாழ்க்கை உங்களுக்காக இருக்கட்டும்.
நதிமேல் இலையாக எல்லாவற்றையும் கடந்து செல்லவும்.
சொந்த வாழ்வில் சோகங்கள் இல்லாதவர்கள் யார்? ஆனால் பிறரின் சோகத்தைத் துடைக்கத் துணிகையில் சொந்த சோகம் இடம் தெரியாமல் போகும்.
எல்லா உலகத் தலைவர்களும் இதை உணர்ந்தவர்கள் தான். டால்ஸ்டாய் மோசமான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவர். ஆனால் இலக்கியம் அவரை இளைப்பாற்றியது. தேசத்துக்கே பிதாவான காந்திஜியின் புதல்வர் ஹரிலால். அவருக்கும் காந்திக்கும் ஒரே மோதலும் முரண்பாடும் தான். ஆனால் தேசப்பணி காந்திஜியைச் சோகத்தில் ஆழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது.
படிப்பில்லை. பணமில்லை. சொந்த பந்த ஆதரவில்லை. பிள்ளைகள் சரியில்லை. நோய்கள். பணியில் பிரச்சினைகள். யாருக்குத் தான் சோகமில்லை? ஆனால் மரணம் அதற்குத் தீர்வில்லை. தற்கொலை செய்தவரின் குடும்பம் எத்தனை காலம் அந்த ரணத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்?
வாழ்க்கையில் நம்பிக்கைகள் முக்கியம். நமக்கேற்ற பிடிமானங்களைத் தேர்வு செய்து கொள்வது மிக முக்கியம். அது மதமோ, விளையாட்டோ, அரசியலோ, சினிமாவோ, இலக்கியமோ, சமூகச் சேவையோ, வேலையோ ஏதோ ஒன்று இருக்கட்டும்.
வாழ்வின் இன்பங்கள் விரைவில் திகட்டி விடும். துக்கங்கள் என்றும் தொடர்ந்து வரும். ஆனால், வாழ்வில் நாம் வைத்துள்ள குறிக்கோள் நம்மைச் சீராக இயக்கிச் செல்லும். சொந்த வாழ்வின் சோகங்களையும் புறந்தள்ள வைக்கும்.

No comments:

Post a Comment