Saturday 30 September 2023

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கவலைப்பட நேரமில்லை

 கவலைப்பட நேரமில்லை . .

துயரற்ற மனிதன்
என உலகில் எவரும் இல்லை.
இந்தத் துயரம் என்பது
ஒரு மனிதனுக்கு
புற்று நோயைப் போன்றது.
புற்று நோய் கிருமிகள்
எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ அதைப் போன்று, துயரென்பது ஒரு துயரம்
மற்றொரு துயரினை
ஆட்கொள்ளும் சக்தியைக் கொண்டது. 'தலை வலி போய்
திருகு வலி வந்த கதையாக.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு துயரம் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு சிலர் துயரினை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டு இருக்கிறார்கள். துயரங்களைக் கனமாக தாங்கிக்கொண்டு, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.
துன்பங்களை நம்முடைய
மனத்திற்குள் புகுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும். இதனால் விளையும் துயரினால் மனச் சோர்வும், மனச்சோர்வினால் மேலும் துயரங்களும் ஏற்படலாம்.
எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை விட்டுவிட்டு
இரண்டலிருந்தும் விலகி நின்று, வாழ்க்கைச் சிக்கல்களை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம்.
மாபெரும் தலைவர்
'வின்ஸ்டன் சர்ச்சில்' அவர்கள்
ஒருமுறை ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, துயர்கொள்ள
எனக்கு நேரம் இல்லை என்றார்.
இதைக் கேட்டது ஒரு நிருபர். அந்த நிருபருக்கு ஒரே வியப்பு. என்ன இது துயரியில்லாத ஒரு மனிதனா. அல்லது அத் துயரினை தாம் உணர நேரம் இல்லை என்று கூறும் ஒரு மனிதனா.என்று வியந்தார்.
வின்ஸ்டன் சர்ச்சில் அதற்கு கூறிய விளக்கம்,
''நான் நாளும் 18 மணி நேரம் வேலை செய்கிறேன், அதனால் எனக்கு துயர்கொள்வதற்கு நேரம் இல்லை என்று கூறினார். உண்மையிலேயே நல்ல பதில் மற்றும் உண்மையும் கூட.
கோடி கோடியாக சொத்து இருக்கலாம். பெரிய பெரிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதற்கு வசதி இருக்கலாம். திறமையான மருத்துவர்களால் வேண்டுமானால் இறப்பினைத் தள்ளிப் போடலாம். ஆனால் ஒருநாள் இந்த உயிர் போகத்தான் போகின்றது.
அப்போது யாராலும்
போகின்ற உயிரைத் தடுத்து நிறுத்த முடியாது. அதுதான் வாழ்க்கையின் நியதி.
இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எதற்கும் துன்புறுவதற்கு அவசியமே இல்லை.
*எதுவுமே நிலைமாறாது இருக்கின்றபோது,
உங்கள் துயரம் மட்டும்
எப்படி நிலைமாறும்.*
*துயரினைக் களையுங்கள்,
மகிழ்வுடன் எப்போதும் இருங்கள்.*

கவனச் சிதறல் . .

 கவனச் சிதறல் . .

ஞாபக மறதி என்பது
ஒரு விதத்தில் கொடை தான் என்றாலும்,அது அனைத்துக்கும் பொருந்தி வருவது இல்லை.*
பலரையும் பாதிப்பது
இந்த ஞாபக மறதி.
சரியான காரணத்தைக்
கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கிறனர் உளவியல் நிபுணர்கள்.*
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.*
*அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை. காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் அவசரமாகவும், படபடப்புடன் செய்வதால் மனம் நிம்மதியற்றுப் போகிறது.*
இந்தச் சூழலில் சாதாரண நிகழ்வுகள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டம் இடுவதன் மூலம் படபடப்பில் இருந்து விடுபட முடியும்.*
மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமானதை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக மாற்றலாம்.*
அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்குக்
கொண்டு வர முடியும்..*
மறதிக்கு இன்னொரு முக்கியக் காரணம் கவனச் சிதறல் தான்
இதனால் முக்கியவற்றை நினைவில் பதியாமல் போய் விடுகிறது.*
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்வது மற்றும் எண்ணத்தை வேறு பக்கம் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாகக் கை விட வேண்டும்.*
இவர்கள் ஒரே நேரத்தில் ஒரே ஒரு வேலையில் முழுக் கவனம் செலுத்தினால் மறதியைத் தடுக்க முடியும். ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்க மனப்பயிற்சியே அவசியமாகிறது.*
மனதை ஒரு நிலைப்படுத்திப் பழகும் பொழுது பயிற்சி காரணமாக
மனம் எந்த செயலைச் செய்கிறோமோ அதில் நிலைத்து இருக்கும்
ஆற்றலைப் பெற்று விடுகிறது. மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்துவதன் மூலமும்
மறதியை விரட்டி விடலாம்.*
அதிகாலையில் எழுந்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.*
இரத்தம் மூளைக்கு அதிகமாகப் பாயும் பொழுது, அதிலுள்ள ஆக்ஸிஜனை மூளை அதிகமாகப் பெற்றுக் கொள்கிறது.
இதுவே இயற்கை மின் சக்தியாகும்.*
எனவே அதிகாலையில் எழுவது,உடற்பயிற்சிகள் செய்வது,மூச்சுப் பயிற்சி போன்ற பழக்கங்களைத் தவறாமல்
செய்ய வேண்டும்.*
அவ்வாறாயின் அவர்கள் இயல்பாகவே நினைவாற்றல் உடையவர்களாக மாறி விடுவார்கள். மேலும் முதுமையிலும் மறதி என்பது அவர்களுக்கு ஏற்படாது.*
மிகப் பெரிய விஞ்ஞானிகள் கூட
ஞாபக மறதியால் மிகவும்
அவதிப்பட்டு இருக்கிறார்கள்.*
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு மறதிக்காரர்.
ஒரு முறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.*
டிக்கெட் பரிசோதகர் வந்து
பயணிகளின் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.*
இதைக் கண்ட ஐன்ஸ்டின் தன்னுடைய டிக்கெட்டை எடுக்க பைக்குள் கையை விட்டார். அங்கு டிக்கெட் இல்லாமல் போகவே அதிர்ச்சி அடைந்தார்.*
தன் கைப்பையை முழுவதுமாகப் புரட்டிப் போட்டுப் பார்த்தார் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகரும் ஐன்ஸ்டினிடம் வந்து டிக்கெட்டைக் கேட்டார்.*
அவரோ செய்வது அறியாமல் மலங்க மலங்க விழித்தார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரின் நிலைமை புரிந்து விட்டது.*
எனவே அவர்
'' நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி என்பது எனக்கு மட்டுமல்ல,
இந்த இரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும்.*
எனவே நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க மாட்டீர்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.
எனவே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
நிம்மதியாகப் பயணத்தைத் தொடருங்கள் என்றார்.''*
அப்பொழுது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா *
''அதுவல்ல என் பிரச்சனை.
டிக்கெட் வேண்டும் என்றால் என்னால் இன்னொன்று கூட வாங்கிக் கொள்ள முடியும்.ஆனால்,
நான் எந்த ஊருக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன் என்பதை அந்த டிக்கெட்டைப் பார்த்தால் தானே
எனக்குத் தெரியும்.
இப்பொழுது டிக்கெட் பரிசோதகர் திருதிருவென விழித்தார்.*
*நினைவாற்றலை அதிகரிக்க
பயிற்சி அளிக்கலாம்.
புதிர் விளையாட்டு,
வார்த்தை விளையாட்டு
ஆகியவற்றில் ஈடுபடலாம்.*
*எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்..*
*நேரத்தையும், வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.*
*முக்கியமாக, மறதிக்காக
கவலைப்படக் கூடாது.
இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.*

Thursday 28 September 2023

இன்பமுமில்லை துன்பமுமில்லை .

 இன்பமுமில்லை துன்பமுமில்லை .

"நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன் .
என்ன காரணம்"
என்று கேட்டார் ஒரு பெரியவர்.
"மற்றவர்கள் எனக்குத்
துன்பம் கொடுக்கிறார்கள்"
"உனக்குத் துன்பம்
கொடுப்பது
உன்னுடைய மனம்தான்"
"அப்படியா சொல்கிறீர்கள்"
"ஆமாம்!"
"அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி"
"மனதைப் புரிந்து கொள்.
அது போதும்."
"எப்படிப் புரிந்து கொள்வது"
என்றான் அவன்.
"இந்தக் கதையைக் கேள்"
என்று அவர் சொன்னார்
ஆசையாக ஒரு பூனையை
வளர்த்தார் ஒருவர்.
அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது,
அவருக்கு அது மகிழ்ச்சியாக
இருந்தது.
மறுநாள் அந்தப் பூனை,
அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.
இன்னொரு நாள் அந்தப் பூனை
சென்று எங்கேயோ
காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை; வருந்தவுமில்லை.
எதையாவது பிடிப்பது
பூனையின் சுபாவம்
என்பதைப் புரிந்து கொள்ள
அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.
தனக்குப் பிடிக்காத எலியைப்
பிடிக்கிறபோது இன்பம்.
தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம்.
தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை.
துன்பமுமில்லை.
- அவர் கதையை முடித்தார்.
இவன் சிந்திக்கத் தொடங்கினான்.
துன்பச் சிறையின் கதவுகள்
திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.
*"மனதைப்
புரிந்து கொள்கிறவர்களே
மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்."*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 27 September 2023

மாலை முரசு 27.09.2023 பக்கம் 5


 

எதுவும் நிரந்தரமல்ல . .

 எதுவும் நிரந்தரமல்ல . .

*சில நேரங்களில்
நாம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும்
சரியான நேரத்தில்
எதிர்பார்த்தபடியே நடக்கலாம்.*
*சில நேரங்களில்
நடக்காமலும் போகலாம்.*
*எந்த நிலையிலும்
சோர்ந்து விடாதீர்கள்.*
*வாழ்வில் எல்லோருக்கும்
எதிர்பார்க்கும் அனைத்தும்
எதிர்பார்த்த நேரத்தில்
எதிர்பார்த்தபடியே நடப்பதில்லை.*
*ஆனாலும்
சிலர் சோர்ந்து விடாமல்
மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.*
*காரணம்
அவர்கள் தன்னைவிட
தன்னைப் படைத்தவனின் திட்டத்தை முழுமையாக நம்புகின்றனர்.*
*முழுமையாக இறைவனிடம் சரணடைந்த பின்பு நடக்கும்
அனைத்தும் நல்லதாகவே தெரியும்.*
*உங்கள் வாழ்வில்
உங்கள் திட்டத்தை விட
உங்களைப் படைத்தவனின்
திட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.*
*முழுமையாக
இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.*
*நீங்கள் நினைப்பதை விட
மிகச் சிறப்பாக வாழ்வீர்கள்!*
*வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்பிக்கையுடன் இருங்கள்.*
*படைத்தவன் மனது வைத்தால் அனைத்தையும் மாற்றுவதற்கு
ஒரு நொடி போதும்.*
*உங்கள் வாழ்வில்
உங்கள் கடினமான சூழ்நிலைகள் எதுவும் நிரந்தரம் அல்ல.*
*அனைத்தும் நிச்சயம் மாறும்.*
*ஒவ்வொரு நொடியிலும் நம்பிக்கையுடன் நகர்ந்து செல்லுங்கள். *
*உங்கள் நம்பிக்கை
உங்கள் வாழ்வை
மிகச் சிறப்பாக மாற்றும். *
*இறை அருளால்
உங்கள் வாழ்வில்
நீங்கள் விரும்பிய மாற்றங்கள்
ஏற்பட்டு மிகச் சிறப்பாக வாழ்வதற்கு வாழ்த்துகள்*

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Tuesday 26 September 2023

மதுரைமணி 26.09.2023 பக்கம் 3


 

ஏமாற்றமா ஏக்கமா . .

 ஏமாற்றமா ஏக்கமா . .

இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் வாழ்க்கை.
வாழ்க்கை என்பது
இன்பம் மட்டும் துன்பமா.
சிலர் இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர்.
சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்.
சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவதிற்காக ஏங்குகின்றனர்.
சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்.
சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்.
இப்படி ஏங்கி ஏங்கியே
சிலரின் வாழ்கை முடிந்து விடுகின்றது. வாழ்கை என்பது ஏக்கமா.
பணக்காரனோ பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறான்.
ஏழையோ பணமே
தம்மிடம் இல்லை என்று
பணத்தைத் தேடி ஓடுகிறான்.
வாழ்கை என்பது பணமா
சிலர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று ஓடுகின்றனர். வாழ்க்கை என்பது சாதனை செய்வதா.
சிலர் வாழ்க்கைக்கு நல்ல கல்வி,
அறிவு வேண்டும்(அவசியம் ) என்கின்றனர். வாழ்க்கை என்பது கல்வியும் அறிவும் மட்டும் தானா.
சிலர் மீது நம்பிக்கை வைத்தே
ஏமாந்து போகின்றோம் நம்மில் சிலர். வாழ்கை என்பது ஏமாற்றமா.
சென்றவர்களை எண்ணியே மனமுடைந்து
கண்ணீர் விடுகின்றோம்.
வாழ்க்கை என்பது கண்ணீர் வடிப்பது மட்டும்தானா.
இங்கு நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு பாடத்தினை காப்பிக்கின்றனர்.
வாழ்க்கை என்பது பாடம் கற்பதா.
சிலர் கனவுகளை துரத்திச் செல்ல இயலாமல் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது கனவு மட்டும் தானா.
இருபதிலும் வாழ்க்கையைத் தொலைத்தவர் இங்கு உண்டு, அறுபதிலும் இங்கு வாழ்க்கையைப் பெற்றவரும் உண்டு.
வாழ்கின்ற வாழ்க்கையை
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

தேசிக விநாயகம் பிள்ளை நினைவைப் போற்றுவோம்


 

Monday 25 September 2023

மதுரைமணி 25.09.2023 பக்கம் 4


 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றுவோம்


 

தினமலர் பக்கம் 4 25-09-2023


 

வாழும் முறை.

 வாழும் முறை.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்
வாழும் முறை சார்ந்தது.
இதன் காரணமாக, குறைவாக சம்பாதிக்கும் நபர்கள் கூட, சிக்கனமாக வாழ்ந்து, பெரிய வளர்ச்சியை, முன்னேற்றத்தை அடைய முடியும்.
உதாரணமாக,
ரொனால்டு ரீட் என்ற பெட்ரோல் கிடங்கில் வேலை பார்த்தவர்,
துப்புரவுப் பணியாளராக வேலைபார்த்தவர்,
நல்ல சேமிப்பு மற்றும் முதலீட்டின் காரணமாக,
கோடீஸ்வரராக உருவானார்.
மேலும், 1.2 மில்லியன் அமெரிக்க டாலரை, ஒரு மருத்துவமனைக்கு வழங்கும் அளவிற்கு, ஈகை குணம் படைத்தவராக விளங்கினார்.
இதனைப் போலவே, ஏழையாக இருந்து, பணக்காரராக மாறிய பல்வேறு நபர்கள் உள்ளனர். அவர்கள் வாழும் முறையின் காரணமாக, உழைப்பின் காரணமாக, பெரும் பணக்காரர்கள் ஆகினர்.
உதாரணமாக, வீடற்றவராக இருந்த கிரிஸ் கார்ட்னர், பெரும் கோடீஸ்வரராக மாறினார். அவரைப் பற்றி,
"த பர்சுயூட் ஆப் ஹாப்பினஸ்" திரைப்படம் வெளியானது.
இதற்கு மாறாக, பொருளாதாரம் இருந்தபோதும், சரியாக வாழாத காரணத்தினால், வாழ்வில் வீழ்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
உதாரணமாக, டென்னிஸ் உலகில் முடிசூடா அரசனாக, பணத்தை குவித்த ஜான் போர்க், சரியாக பணத்தை கையாளாத காரணத்தினால், ஏழையானார்.
எனவே, வாழும் முறையின் மூலமே, ஒருவரின் முன்னேற்றம் முடிவாகிறது. எந்த ஒரு பணக்காரனும், சரியான முறையில் வாழாவிட்டால் ஆண்டி ஆகிவிடலாம்.
*வளர்ச்சி
மற்றும்
முன்னேற்றம்
வாழும் முறை சார்ந்ததே.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

உடுமலை நாராயண கவி பிறந்த நாள்


 

யார் இவன்? ராஜ பரம்பரையின் இளவரசனா?


 யார் இவன்?

ராஜ பரம்பரையின் இளவரசனா?
மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரின் மூத்த மகனா?
ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வெள்ளி கொலுசு வெண்கல குடம் தங்க கம்மல் தருவேன் .. வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்கும் அளவு கோடிகளை சேர்த்து வைத்த அரசியல்வாதியா?
பஞ்ச் டயலாக் பேசும் சினிமா நடிகரா?
ஏன் இந்த எழுச்சி?
மக்கள் முகத்தில் எப்படி இவ்வளவு சிரிப்பு.. சிலிர்ப்பு?
ஒரு ஆடு மேய்ப்பவன் மகனுக்கு எப்படி இவ்வளவு ஆரவாரமான வரவேற்பு?
ஒரு விவசாயி மகன் நடந்தால் எப்படி உண்டாகிறது திருவிழா?
ஒரு வயல்காட்டு நடவு தாயின் மகனால் தன் வாழ்க்கை மாறும் என்று எப்படி நம்புகிறது தமிழகம்?
அண்ணாமலையானை கிரிவலம் சுற்றினால் நல்லது நடக்கும் என்று நம்பிய மக்கள் ..
ஒரு குடிசை வீட்டில் கஞ்சி குடித்து வளர்ந்த குழந்தை ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று .. 35 வயதில் கர்நாடக சிங்கம் என்ற புகழை பெற்று .. 38 வயதில் அந்த பதவியை அங்கேயே தூக்கி போட்டு .. தங்களுக்காக வந்தபோது .. கண்கள் தழும்புகிறது தமிழகம்..
அந்த அண்ணாமலை ஈசனே...தங்கள் வாழ்வில் நல்லது நடக்க. அனுப்பி வைத்த அற்புதனாக. நடந்து வரும் அந்த அண்ணாமலையை பார்க்கிறது .. தங்கள் கவலைகளை உடைத்து அழுதபடி தமிழகம் ..
இனி விடுவதற்கில்லை ..
எங்கள் தமிழர்களின் வயிற்றில் அடித்த எவனையும் ...
இனி விடுவதற்கில்லை ..
எங்கள் மண்ணில் பசித்திருக்க ஒரு தனி மனிதனையும் ...

ஒரு நேர்மையான மனிதனை கட்சிக்கு தலைவராக்கியதால் ..

 


ஒரு நேர்மையான மனிதனை கட்சிக்கு தலைவராக்கியதால் ..

தங்களால் வருங்காலத்தில் ஏதும் ஊழல் செய்ய முடியாமல் போய்விடுமோ என அச்சம் கொள்ளும் சொந்த கட்சிக்காரா்கள் ஒரு பக்கம் !!
ஏற்கனவே செய்த ஊழலை இவர் அம்பலப்படுத்த தயங்கமாட்டார் என்ற பயத்தில் கூட்டணி கட்சிக்காரா்கள் ஒரு பக்கம்!!
இன்னாருபுறம் தமிழகத்தை முழுவதும் சுரண்டமுடியாமல் தவிக்கும் எதிா்கட்சிகள்..!
இந்த மூவருக்கும் இடையில்..
தனிமனித ஒழுக்கத்திலும், பொது வாழ்விலும்,
ஒரு நேர்மையான திமிரான மனிதனாய் திகழ்வதே சிறப்புதான்!
அந்த திமிரான மனிதரை ஆதரிப்பதும் ஒரு #கர்வம் தான்.!
அரசியலை புரிந்த சிலர் வைக்கும் வாதம்!
அண்ணாமலையின் நேர்மை மீதெல்லாம் எங்களுக்கு சந்தேகமில்லை!.
அவர் பணியாற்றிய துறையில் அவர் நேர்மையாளராக விளங்கி இருக்கலாம்.
ஆனால் ,
அரசியல் என வரும்போது அவர் சிலவற்றை புரிந்துக்கொள்ள வேண்டும். அரசியல் இலக்கணமே வேறு. சிலவற்றை அவர் கட்டாயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியலில் நேர்மையை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது கடினம் என்கிறார்கள்.
இதே வாசகத்தை தூக்கிக் கொண்டுதான் மூத்த அமைச்சர்கள் என்ற அடையாளத்தோடு சில கரைப்படியா கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள்.
டெல்லி தலைமை அவ்வளவு சீக்கிரம் இவர்கள் கோரிக்கைக்கு செவிச்சாய்க்காது. மாறாக அரசியல் கணக்கு, அரசியல் சாணக்கியத்தனம் என ஏதாவது ஒரு புள்ளியில் இவர்கள் கோரிக்கையை ஏற்று டெல்லி பாஜக தலைமை முடிவெடுக்குமானால்!
தமிழகத்தில் பாஜக ஆட்சி என்பது கேள்விக்குறியாகும்!.
அண்ணாமலை பக்கம் இளைஞர்கள் செல்வதற்கு காரணமே...
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, சமரசம் இல்லாத கொள்கை பிடிப்பு ஆகியவைதான்.
இதை யாருக்காகவும் அண்ணாமலை கைவிடுவதாகவும் தெரியவில்லை!
இந்த அண்ணாமலையை தேடிவந்திருக்கும் இளைஞர்களும் அவரை கைவிடுவதாகவும் இல்லை.
அரசியலின் முக்கியமான காலக்கட்டத்தில் அண்ணாமலை!
அந்த அண்ணாமலை துணையிருக்க!
இந்த அண்ணாமலையின் அரசியல் வாழ்வில்
என்றும் ஏறுமுகமே!
கடைசியாக ஒரு உண்மை!!
இந்த அண்ணாமலை எனும் சிற்பத்தை செதுக்கிக் கொண்டிருப்பதே திரு மோடிஜி எனும் ஒப்பற்ற தலைவனும், இந்திய அரசியலின் சாணக்கியன் திரு அமித்ஷா அவர்களும் தான் .
இது தெரியாம இங்கே சிலா்.. அண்ணாமலையை நீக்க சொல்லி அவர்களிடமே கோரிக்கை வைக்க இருக்கிறார்களாம்....!? பகிர்வு




மதுரையில் யோகா பயிற்சிப் பட்டறை.

 மதுரையில்

யோகா பயிற்சிப் பட்டறை.
மகாத்மா காந்தி யோகா நிறுவனம் & திருமூலர் மற்றும் பதஞ்சலி ஆசிரமம் ஸ்கூல் ஆப் யோகா (தபஸ் யோகா), இந்தியன் யோகா அசோசியேசன் தமிழ்நாடு மாநிலப் பிரிவு இணைந்து நடத்திய யோகா பயிற்சிப் பட்டறை இன்று காலை மதுரை தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கில் யோகா கலைச் செம்மல், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் த. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தபஸ் யோகா நிறுவனர் வழக்கறிஞர் பா. ஜெயசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார்,
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
யோகம் தரும் நலன்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சர்வதேச யோகா பேராசிரியர் முனைவர் இரா. இளங்கோவன்
விழா பேருரை ஆற்றி பங்கேற்பார்கள் பயன்பெறும் வகையில் இரண்டு அமர்வாக பயிற்சியளித்தார்.
யோகாவனம் நிறுவனர் திருமதி செ. பாரதி தொகுப்புரை ஆற்றிட தொடக்க விழாவில் மகாத்மா காந்தி யோகா நிறுவன இயக்குநர் கே பி கங்காதரன் நன்றி கூறினார்.
நிறைவு விழாவில் மகாத்மா காந்தி யோகா நிறுவன முதன்மை ஆசிரியர் வே. சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.
மிக நேர்த்தியான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
முற்றிலும் வணிக நோக்கமின்றி சமூக அக்கறையுடன் நடந்த இந்நிகழ்வில் முன்னூறுக்கும் அதிகமானோர் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.