Saturday 16 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை,முருடேஸ்வர்..
கர்நாடகா மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு ஆன்மிக அற்புதம் இந்த சிவாலயம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கட்டிப்போடும் ஓர் ஆலயம். ஆன்மிகத்தையும் இயற்கையையும் ஒரு சேர கண்டு கழிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
தினசரி காலை 5.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மட்கோவன் பாசஞ்சர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரசுக்கு சிறந்த இணைப்பு ரயில். வழிநெடுக இயற்கை காட்சிகள் கண்ணைப் பறிக்கும். குகைகள் வழியாக ரயில்கள் செல்வது குழந்தைகளை குதூகலப்படுத்தும். இந்தியாவின் மிக அழகான ரயில் பாதை இது. மங்களூரு மும்பை கொங்கன் ரயில்வே தடத்தில் பகல் நேரத்தில் இயற்கையை ரசித்துக்கொண்டே பயணிப்பது ஓர் அற்புதமான அனுபவம்.
வழியெல்லாம் பச்சை பசுமை, கடல், நதி, மலை, மழை… நிஜமாவே கொங்கன் ரயில்வேயில் பகல் நேர ரயில் பயணங்கள் அதிலும் மழைக்கால பயணங்கள், நம் ஆன்மாவை முழுசா சுத்திகரித்துவிடும். அனுபவிச்சு பார்த்தா தான் அந்த சுகம் புரியும். எத்தனை பெரிய கவலை இருந்தாலும் மறந்து மனசு லேசாயிரும்.
இந்தியாவில் வேறுஎங்கும் காணமுடியாத ரோல் ஆன் ரோல் ஆப் என்ற ரயில் சர்விசை இங்கு மட்டுமே பார்க்க முடியும். ரயில்கள் மீது சரக்குடன் கூடிய லாரிகள் வரிசையாக செல்கின்றன. இந்த பகுதியில் செல்லும் சாலைகள் மிக கடினமானது. ஏகப்பட்ட வளைவுகள் கொண்ட அபாயகரமான சாலை. மலைகள் வழியாக செல்வதால் அந்த சாலைகளால் லாரிகள் நிறைய சேதங்கள் அடைகின்றன. விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. அதனை தவிர்ப்பதற்காகவே ரயில்கள் மீது லாரிகள் ஏற்றி செல்லப்படுகின்றன. நமக்கு இதுவொரு வித்தியாசமான அனுபவம்.
சரி, இப்போது கோயிலுக்கு செல்வோம். முருதேஸ்வர் ரயில் நிலையத்திலிருந்து முருடேஸ்வரர் கோயில் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆட்டோக்கள் செல்கின்றன. ரூ.50 கட்டணமாக தரவேண்டியிருக்கும். இங்கு ஆட்டோ கட்டணங்கள் நியாயமாகவே இருக்கின்றன.
மூன்று பக்கமும் அரபிக் கடல் சூழ்ந்து இருக்கும் கண்டூக மலை மீது இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இந்த ஊரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்தக் கோயிலின் கோபுரமும் சிவனின் பிரமாண்டமான சிலையும் தெரிகிறது.
ஆட்டோவில் சென்று இறங்கிய உடனே நம்மிடம் ரூம் வேண்டுமா என்று கேட்டு வருபவர்கள்தான் அதிகம். அந்தளவிற்கு இங்கு தங்கும் விடுதிகள் இருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தாராளமாக இங்கு அறையெடுத்து தங்கலாம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.750-ல் இருந்து அறைகள் இருக்கின்றன.
முருடேஸ்வர் கடற்கரை சிறிய அலைகளை கொண்ட கடற்கரையாக இருக்கிறது. அதனால் இங்கு நீராடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
கோயிலின் நுழைவாயிலைக் கடந்ததும் மிகப் பெரிய கோபுரம் இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் இது. 20 மாடி உயரம் கொண்டது. கோபுர வாசலின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு யானை சிலைகள் நம்மை வரவேற்கின்றன. அதற்குள் நுழைந்தால் கோபுரத்தின் மேல் பகுதிக்கு செல்ல இரண்டு லிப்டுகள் இருக்கின்றன. ஒரு நபருக்கு ரூ.10 கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.
கோபுரத்தின் மேலிருந்து பார்க்கும்போது பிரமாண்டமான சிவன் சிலையும் அதன் பின்புலத்தில் ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலும் பேரழகு. சிலையின் முன் அமைந்திருக்கும் நந்தி, பசுமை போர்த்திய புல்வெளி என்று எல்லாமே கண்களை விட்டு அகலாத காட்சிகள். கோபுரத்தின் முன் பகுதியில் பார்த்தால் முருடேஸ்வர் நகரின் அழகு, தென்னை மரங்கள் மற்றொரு உலகை நமக்கு காட்டுகின்றன. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் அரபிக் கடலும் அதன் கரையோரத்தில் வளர்ந்திருக்கும் பசுமை மரங்களும் அழகுக்கு அழகு சேர்கின்றன. இந்த கோபுரத்தின் மேல் தளம் நமக்கு மற்றொரு உலகத்தை காட்டுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதையெல்லாம் பார்த்து சொக்கிப்போவது நிச்சயம்.
இந்தக் கோபுரம் 238 அடிகள் உயரம் கொண்ட ராஜகோபுரம். 2008-ம் ஆண்டு தான் இது ஆர்.என்.ஷெட்டி டிரஸ்ட் மூலம் கட்டி முடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இது உலகின் இரண்டாவது உயரமான கோபுரமாக திகழ்கிறது. அதேபோல் இங்கிருந்த சிதிலமடைந்த கோயிலை 1977-ம் ஆண்டு புதுப்பித்தார்கள். அதே ஆண்டில் கோயிலுக்கு அருகில் 5 கோடி ரூபாய் செலவில் 123 அடிகள் உயரம் கொண்ட பிரமாண்ட சிவன் சிலையை அமைத்தார்கள். இந்த சிலைதான் உலகிலேயே சிவன் சிலைகளில் இரண்டாவது உயரமான சிலையாகும். முதல் சிவன் சிலை நேபாள நாட்டில் இருக்கிறது.
தமிழக சிற்பிகள் இந்த சிலையை இரண்டு வருடங்களில் உருவாக்கினார்கள் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம்.
சூரிய ஒளி நேரடியாக சிலை மீது விழும் படி அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிலை மீது தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. சூரிய கதிர்கள் சிலை மீது படும்போது உண்மையிலேயே தங்கம் போல் தகதகவென கண்ணைப் பறிக்கும் ஒளியில் ஜொலித்துக்கொண்டிருந்தது. காலப்போக்கில் கடலில் இருந்து வீசிய பலத்த கடல் காற்று மற்றும் தொடர் மழையால் தங்க முலாம் பொலிவிழந்து, அழிந்து போயிற்று. அதன் பிறகுதான் இந்த நிறம் பூசப்பட்டது. பல புயல்களை சந்தித்தும் சிலை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
முருதேஸ்வர் கோயில் பார்ப்பதற்கு நவீன கட்டடக்கலையில் கட்டப்பட்டதாக தெரிந்தாலும், இதன் வரலாறு இராமாயண காலத்திலிருந்தே தொடங்குகிறது.
இங்கு சிவன் முருடேஸ்வர் என்ற அகோர உருவத்தில் இருக்கிறார். இந்த நிகழ்வை விளக்கும் அழகிய சுதை சிற்பங்களைக் கோயிலின் மேற்பகுதியில் காணலாம். சிலையின் கீழுள்ள குகையில் இதை ஒரு கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள். அதற்கு கட்டணம் ரூ.10. மற்றபடி மிக சுத்தமாக பராமரிக்கப்படும் இவ்வளவு பெரிய கோயிலில் எங்குமே கட்டணம் ஏதும் இல்லை. இதே கோயில் நமது தமிழ் நாட்டில் இருந்திருந்தால்..? கோவிலில் அன்னதானம் தினமும் நடக்கிறது. பலவித சேவைகளும் நடக்கின்றன. இங்கு மகாசிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
ஆன்மிகம் மட்டுமல்ல. இங்கு அட்வெஞ்சரும் உண்டு. நீர் விளையாட்டுகள் என்று அழைக்கப்படுகிற வாட்டர் ஸ்போர்ட்ஸ் இங்கு விளையாடப்படுகிறது. ஸ்பீட் போட்டிங், டால்பின் போட்டிங், ஸ்குபா டைவிங் என்று ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. இது இளைஞர்களை பெரிதாக கவர்கிறது. இதமான சூழல் நிலவினால் மட்டுமே இந்த சாகச நீர் விளையாட்டுகள் நடத்த அனுமதிக்கப்படுகின்றன.
அக்டோபர் முதல் மே மாதம் வரை சீசன் காலம். இதமான பகல் நேர குளிர், கோடை காலத்தில் தாங்கக்கூடிய வெப்பம் என்று சாதகமான வானிலையே நிலவுகிறது. ஸ்குபா டைவிங் செல்ல விரும்புபவர்கள் நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில் இங்கு செல்வது நல்லது. கடும் மழை, கடல் கொந்தளிப்பு இருந்தால் நீர் விளையாட்டுகள் எதுவும் இங்கு நடை பெறாது. சுற்றுலா பயணிகள் அதற்கேற்ப பயண திட்டத்தை வகுத்துக்கொள்வது நல்லது.
எப்படி செல்வது?
சென்னையிலிருந்து கோயம்பத்தூர் பாலக்காடு வழியாக மங்களூருக்கு ரயிலில் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ முருடேஸ்வர ரயில் நிலையத்திற்கு செல்லலாம்.
இங்கு தங்குவதற்கு தகுதிக்கேற்ப பலவித கட்டணங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன.
முருடேஸ்வர பயணம் குடும்பத்தினர் அனைவருக்கும் ஓர் அற்புதமான அனுபவத்தை தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment