Monday 13 September 2021

ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக

 ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக

உள்ளம் உருக, விழிசெருக, உடலம் எங்கும் களிபரவ,
வள்ளல் நாம ஜெபத்தாலே விழியும் கண்ணீர்த் துளிபெருக
மெல்ல இருந்த பெருமாளே! வேண்டித் தினமும் தொழுவேனே!
அள்ளி வழங்கி எனது குறை அனைத்தும் தீராய் அனுமானே!
பொறியும் புலனும் போனபடிப் போகும் விலங்குச் சாதியிலே
தறியா தலையும் காற்றினுக்கே தனயன் ஆனாய் மேருவிலே!
நெறியும் நிலையும் தவறாமல் நின்றாய்! யார்பால் அது கற்றாய்!
அறியேன் உன்போல் ஒருவனையே அருள்வாய் ஐயா அனுமானே!
படிகம் போலும் பால் போலும் பரமா, உனது நிறம் விளங்கும்!
வெடிபோல, கோடை இடிபோல விம்மி உனது குரல் முழங்கும்!
அடிபாதாளம் அதன் கீழே! அணிமா முடியோ விண்மேலே!
வடிவாய்க் காட்சி தருவானே! வணக்கம், வணக்கம் அனுமானே!
ஆயுள் வளரும் உன்னாலே! அழகும் வலிவும் உன்னாலே!
பாயும், நோயும் பல்பகையும் பறந்துபோகும் உன்னாலே!
கோயில் எனது நெஞ்சகமாம்! கூறும்கவிதை மந்திரமாம்!
தேயம் தழுவும் புகழோனே! சித்தம் இரங்காய் அனுமானே!
அன்னை அருளால் அவ்வுலகில் அழியா திருக்கும் பெரியபதம்
மன்னன் அருளால் இவ்வுலகில் மலரோன் நிகராய்ப் பிரம்மபதம்!
தன்னை நம்பும் அடியார்க்குத் தலைமை தருதல் உனது குணம்!
என்னை ஆளும் பகவானே இன்றே அருள்வாய் அனுமானே!
ஜென்மச் சனியால், அட்டத்தில் சீறும் சனியால், கண்டகனாம்
வன்மச் சனியால் நீச்சமுடன் வக்ரச் சனியால் உனையடைந்தோம்
கன்மச் சனியின் பகைவிலக்கு கலங்கும் குடியை நிலைநிறுத்து!
பொன்னைப் பொழியும் கையோனே! போற்றி, போற்றி அனுமானே.

No comments:

Post a Comment