Saturday 25 September 2021

எந்நாளும் நன்னாளே

 எந்நாளும் நன்னாளே

ஒவ்வொரு நாளும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.. ஆனால் கடந்து சென்ற நாட்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு வரும் நாட்களை வசந்தமாக்குங்கள்.
எல்லா நாட்களும் வெற்றி நாளாக வேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. ஆனால் ஒருவேளை அது அவ்வாறு இல்லாவிட்டால் மகிழ்ச்சியான நாட்களை எண்ணி நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாளையும் சிறப்பானதாக்க நம்முடைய முயற்சி அவசியம்.
தோற்ற நாட்களை எண்ணி வருந்தாமல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு போராட வேண்டும். தோற்றுப் போன நாட்களை எண்ணி நேரத்தை விரயம் செய்யாமல் அதை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று சிந்தியுங்கள். தவறுகளைத் திருத்திக் கொண்டு வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
இரவு தூங்குவதற்கு முன் இறைவனிடம் இந்த நாள் எனக்கு இனிதே நிறைவுற்றது எதிர்வரும் நாளும் எனக்குச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள். மனதின் எண்ணங்களுக்கு என்றுமே சக்தி அதிகம். மறுநாள் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப்படுத்துங்கள். அதை எவ்வாறு திறம்பட முடிப்பது என்று திட்டமிடுங்கள்.
காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலைகளை விரைவாக முடித்து வெற்றி காண்பீர்கள். நிச்சயம் அந்த நாள் வெற்றி நாளாக இருக்கும். வெற்றியும் தோல்வியும் உங்கள் கையில் தான் உள்ளது. திட்டமிட்டுத் திறம்பட உங்கள் வேலையைச் செய்தால் வெற்றி நிச்சயம்.
எல்லா நாளும் மகிழ்ச்சிப் பொங்க வேண்டுமெனில் அயராத முயற்சியும் திட்டமிடலும் முயற்சியும் தேவை. வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்க எதிர்நீச்சல். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. தோல்விகளைத் தூக்கிப் போடுங்கள். வெற்றி நாளை நினைத்து வீறுநடை போடுங்கள். நீங்கள் நினைத்தால் எல்லா நாளும் இனிய நாளே.

No comments:

Post a Comment