Tuesday 28 September 2021

பகிர்ந்து கொள்ளும் பக்குவம்.

 பகிர்ந்து கொள்ளும் பக்குவம்.

மற்றவர்களை எடை போடுவதில் நாம் எப்போதுமே முதலாவது இடம்தான். ஒருவரைப் பற்றியோ!, ஒரு செயலைப் பற்றியோ!, நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவது வேடிக்கையானது.
தொழிலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்குமே இது பொருந்தும். கவர்ச்சிகரமாக தொலைக்காட்சியில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து, அந்தப் பொருள் தரமானது என நம்பிவிடுகிறோம்...
ஒருவரைக் குறித்து இப்படியெல்லாம் எடைபோடுவது சரிதானா...? வேற்று நபர்களை விட்டு விடுவோம். நம் குடும்பத்தில் இருப்பவர்கள், நெருங்கியவர்கள், நண்பர்கள் மேலேயேகூட பல நேரங்களில் நமக்கு தவறான எண்ணங்கள் வந்துவிடுகிறது...
நமது வாழ்க்கையை நாம் ஆழமாக பார்க்ககின்ற போது
அடுத்தவர்களின் வாழ்க்கையை நாம் மேலோட்டமாகத்தான் பார்க்கின்றோம், ஒரு முறையேனும் மற்றவர் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் புரிய முயற்சிப்பதே இல்லை...
மற்றவர்களின் தோற்றத்தை எடை போட்டே பழக்கப்பட்ட நாம் ஒரு முறையும், அவர்கள் நிலையிலிருந்து அவர்களை எடைபோடவும் நாம்முனைந்தது இல்லை. மற்றவர் வாழும் சூழ்நிலைகள் நாம் கடந்து வந்த அதே பாதைகளில் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்..
இலண்டனிலிருக்கும் ஒரு பூங்கா. முதியவர் ஒருவர் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு அங்கே அடிக்கடி வருவார். அவளுடன் கதைகள் பேசுவார். விளையாடுவார். அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்வார்...
அன்றைக்கு அந்த முதியவர் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு அங்கே வந்திருந்தார். அவள் கையோடு எடுத்து வந்திருந்த பந்தைக் கொண்டு இருவரும் சிறிது நேரம் விளையாடினார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகிலேயே சாலை இருந்தது...
சற்று தூரத்தில் வண்டியில்வைத்து ஒருவர் ஆப்பிளை விற்றுக்கொண்டு போவதை அந்தச் சிறுமி பார்த்தாள். உடனே!, ``தாத்தா... எனக்கு ஆப்பிள் வேண்டும் ’’ என்று சொல்லி, ஆப்பிள் வண்டியைக் கைகாட்டினாள்.
முதியவர் ஆப்பிள் வியாபாரியைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டார்...
அவர் நின்றதைப் பார்த்துவிட்டு, பேத்தியை அழைத்துக்கொண்டு சாலைக்குப் போனார். முதியவர் தன் சட்டைப் பையில் கைவிட்டுப் பார்த்தார். அன்று அவர் அதிகமாகப் பணம் எடுத்து வந்திருக்கவில்லை. ஆனால்!, அவரிடமிருந்த பணம் இரண்டு ஆப்பிள்களை வாங்குவதற்குப் போதுமானதாக இருந்தது...
இரண்டு ஆப்பிள்களை வாங்கி, தன் பேத்தியிடம் கொடுத்தார். பேத்தி ஆப்பிள்களை வாங்கிக்கொண்டாள். கைக்கு ஒன்றாக, இரண்டையும் பிடித்துக்கொண்டாள்.
ஆப்பிள்காரர் நகர்ந்ததும் முதியவர் பேத்தியிடம் கேட்டார்...
"கண்ணு...!, இரண்டு ஆப்பிள் இருக்கிறதே... ஒன்று நீ சாப்பிடுவாயாம். மற்றொன்றை தாத்தாவுக்குத் தருவாயாம். எனக் கூற, ’’இதைக் கேட்ட அடுத்த கணம் அந்தச் சிறுமி ஒரு கையிலிருந்த ஆப்பிளை ஒரு கடி கடித்தாள்...
முதியவருக்கு இதைப் பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் அடுத்துப் பேச வருவதற்குள் அந்தச் சிறுமி மற்றொரு கையிலிருந்த ஆப்பிளையும் கடித்துவிட்டாள்...
பெரியவருக்குக் கோபம் முட்டிக் கொண்டு வந்தது. பேத்திக்கு மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், தன்னிடமிருப்பதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற குணம் எப்படி இல்லாமல் போனது என்று வேதனைப்பட்டார்...
பேத்தியைத் தன் மகள் இப்படி பேராசைக்காரியாக வளர்த்திருக்கிறாளே என்கிற வருத்தம் வந்தது. அவர் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்துபோனது.
அப்போது பேத்தி தன் இடது கையிலிருந்த ஆப்பிளை நீட்டினாள். "தாத்தா இதைச் சாப்பிடுங்க...!" இதுதான் நல்லா ருசியா, இனிப்பா இருக்கு. உங்களுக்குத்தான் இனிப்புப் பிடிக்குமே!’’முதியவர் பேச்சிழந்து போனார். பேத்தியை வாரியணைத்து முத்தங்கள் பொழிந்தார்...
ஆம் நண்பர்களே
இப்படித்தான் நாமும் அவசரமாய் மற்றவரை எடை போட்டு விடுகிறோம். அவர்களது சூழ்நிலையை கருத்தில் கொள்வதே இல்லை. ஓர் நபரைப் பார்த்து, அவரின் நடவடிக்கைகளைப் பார்த்து சட்டென்று அவர் குறித்த ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.
காணும் காட்சிகளை வைத்து மற்றவர்களை எடை போடாமல், அடுத்தவர்களுக்கும் நம்மைப்போல ஆயிரம் தொல்லைகள், இடர்பாடுகள் இருக்கும் என்பதை உணர வேண்டும்.
ஆம்!, பிறரைப்பற்றி விமர்ச்சிக்கும் முன்னால் நாம் அவரிடத்தில் இருந்து இருந்தால் நாம் என்ன செய்து இருப்போம் என்று எண்ண வேண்டும்.

No comments:

Post a Comment