Tuesday 21 September 2021

சரியான செயல்கள் தேவை.

 சரியான செயல்கள் தேவை.

நார்வே நாட்டில் குளிர் காலத்தில் குளிரானது மிகக் கடுமையா இருக்கும். பெரிய ஏரிகள் எல்லாம் நன்றாக உறைந்து தரைபோல இருக்கும். அந்த காலத்தில் மக்கள், அந்த உறைந்த ஏரியில் துளை போட்டு, அதன் வழியாக மீன் பிடிப்பார்கள். மேற்பரப்புதான் உறைந்து தரை போல இருக்கும், ஆனா அதற்கு கீழே தண்ணீர் இருக்கும். அதில் மீன்கள் நீந்தி விளையாடும். அந்த மீனை பிடிப்பதற்கு பெயர்தான் ஐஸ் ஃபிஸ்ஸிங் Ice Fishing இது ஒரு பொழுது போக்கும் ஒரு செயல் என்று கூடச் சொல்லலாம்.
ஒரு நாள் அங்கு வாழ்ந்த முதியவர் ஒருத்தர், ஐஸ் ஃபிஷிங் செய்ய முடிவெடுத்து, காலையிலேயே தன்னோட வோட்கா போத்தலோடு வந்தார். ஏன்னா, இது வெறும் மீன் பிடிக்கிறது மட்டுமல்ல‌… இதுல பல விஷயங்கள் இருக்கு. ரொம்பநேரம் பொறுமையா அங்கேயே தூண்டில் போட்டுக் காத்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமா வொட்கா பாட்டில் காலியாச்சு… அதோட ரொம்ப நேரம் காத்திருந்ததுல ஒருவித களைப்பு, மயக்கமும் சேர்ந்துடுச்சு.
மாலை 4 மணியாச்சு. இதுவரைக்கும் ஒரு மீன்கூட அவரோட தூண்டில்ல சிக்கல! அந்த நேரத்துல ஒரு இளைஞன், பயங்கர சப்தமா ராப் மியூசிக் அதிர, அவர் பக்கத்துல தூண்டிலோடு உட்கார்ந்தான். பனிக்கட்டில துளை போட்டு, அவனும் மீன் பிடிக்கத் தயாரானான். அப்போ அந்த வயசானவரு நினைச்சாரு… ‘இளைஞர்களப்போல முட்டாள்கள் யாருமில்ல. எதைப் பத்தியும் அவங்களுக்கு ஒன்னும் தெரியறதில்ல… காலையில இருந்து மணிக்கணக்கா சப்தம் போடாம, பொறுமையா நான் காத்திட்டிருக்கேன். எனக்கே இதுவரைக்கும் ஒண்ணும் சிக்கல. இந்த முட்டாள்… இப்படிக் காது கிழிக்கற இசையோட பெரிசா வந்துட்டான்’னு தனக்குள்ள பொருமினார்.
ஆனா, என்ன ஆச்சரியம்! 10 நிமிஷம் ஆகறதுக்குள்ள, அந்தப் பையன் பெரிய மீனா புடிச்சிட்டான். அவரால நம்பவே முடியல! ‘சரி… இது ஏதோ காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா நடந்திருக்கும்னு’ தன்னைத் தானே தேத்திக்கிட்டு, மறுபடியும் மீன் பிடிக்கறதுல மும்முரமானார். ஆனா, அடுத்த பத்தாவது நிமிஷத்தில அந்தப் பையன் இன்னொரு மீனையும் பிடிக்க, அவரால அவனைப் புறக்கணிக்க முடியலை. அந்தப் பையனைக் கவனிக்க ஆரம்பிச்சாரு. மறுபடியும் பத்து நிமிஷம் ஆகறதுக்குள்ள அந்தப் பையன் இன்னொரு பெரிய மீனைப் பிடிச்சான்.
இப்போ அந்தப் பெரியவரு, அந்தப் பையன்கிட்ட கேட்டாரு: ‘‘நான் காலையில இருந்து இங்கேயே தான் உக்காந்திருக்கேன், நான் ஒரு மீன் கூட பிடிக்கல. ஆனா நீ வந்த அரைமணி நேரத்தில 3 பெரிய மீன்களைப் பிடிச்சிட்டியே? இது எப்படி நடந்துச்சு?’’ அதுக்கு அந்தப் பையன், தன்னிடம் இருந்த சிறு பெட்டியை காட்டினான். அதில் கதகதப்பான வெப்பத்தில் மீன்பிடி தூண்டிலில் மாட்டப்படும் புழுக்கள் உயிருடன் ஊர்ந்து கொண்டு இருந்தன.
அதை அவர்கிட்ட காட்டி, ‘‘தூண்டில்ல மாட்டும் புழுக்களை சூடா வெச்சிருக்கணும்’’னு சொன்னான். உறைஞ்சுபோன புழுக்களை வெச்சு மீன் பிடிக்கப் போனா, மீன் பிடிக்க முடியாது.
ஒரு காரியம் நடக்கணும்னா அதுக்குத் தேவையான, ‘சரியான’ செயலைச் செய்யணும்.
‘சரியான’ செயல்னா, நீங்க எதைச் சரின்னு நினைக்கிறீங்களோ, அது இல்ல!* *எது வேலை செய்யுமோ, அதுதான் ‘சரியானது’.
செயல் முக்கியமல்ல, சரியான செயலே முக்கியம்.

No comments:

Post a Comment