Monday 23 August 2021

ஆவணி அவிட்டத்தன்று ஏன் பூணூல் மாற்றுகிறார்கள் தெரியுமா?

 ஆவணி அவிட்டத்தன்று ஏன் பூணூல் மாற்றுகிறார்கள் தெரியுமா?_*

பொதுவாக ஆவணி அவிட்டம் என்றதும் பூணூல் மாற்றும் சடங்கே நினைவுக்கு வரும்.
ஆனால், வெறும் பூணூல் மாற்றும் சடங்காக மட்டும் ஆவணி அவிட்டம் இல்லை.
அது வேதக் கல்வியைத் தொடங்கும் நாள் என்கின்றன சாஸ்திரங்கள்.
கல்வி கற்பதையும் கற்பிப்பதையும் போற்றும் விழா ஆவணி அவிட்டம்.
முற்காலத்தில் எல்லா விதமான கல்வியையும் கற்பதற்கு சிறுவர்களை அனுப்பும் முன்பாக அவர்களுக்கு உபவீதம் என்னும் பூணூலை அணிவித்து காயத்ரி மந்திரம் உபதேசித்து அனுப்பும் வழக்கம் இருந்தது.
பிற்காலத்தில் அந்த வழக்கம் மாறி குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே அதை அணியும் வழக்கமாக மாறிவிட்டது.
ஆவணி அவிட்டத்தன்று கல்வியைத் தொடங்குவதை 'உபாகர்மா' என்று சொல்கிறார்கள்.
பொதுவாக 'ஸ்ராவண மாதம்' எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஆடி அமாவாசை முதல் ஆவணி அமாவாசை வரையிலான மாதத்தில் அவிட்ட நட்சத்திர நாளில் அல்லது பௌர்ணமி திதியில் ஓர் ஆண்டுக்கான கல்வி தொடங்குகிறது.
ரிக் வேதிகள் ஸ்ராவண மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திரத்தன்றும் யஜூர் வேதிகள் ஸ்ராவண மாத பௌர்ணமி திதி அன்றும் உபாகர்மாவைச் செய்கின்றனர்.
ஸாம வேதிகள் ஆவணி மாத ஹஸ்த நட்சத்திரத்தன்று (விநாயகர் சதுர்த்தி) உபாகர்மாவைக் கடைப்பிடிக்கிறார்கள்.
சில ஆண்டுகள் பௌர்ணமி திதியும் அவிட்ட நட்சத்திரமும் இணைந்தே வரும் நாளில் அல்லது அடுத்தடுத்த நாள்களில் வரும்.
'உபாகர்மா' என்ற சொல் வேதக் கல்வியைக் குறிக்கிறது.
வேதக் கல்வி என்பது 12 ஆண்டுகள் குருகுலத்தில் தங்கி ஒரு மாணவன் கற்கவேண்டியது.
இந்த 12 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.
தட்சிணாயன மாதங்களான ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறுமாதங்களில் `ஸ்ருதி’ என்று அழைக்கப்படும் வேதஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துகள் ஆகியவை இந்தக் கற்பிக்கப்படும்.
பின்பு உத்ராயன புண்ணியகாலத்தின் தொடக்கமான தை மாதத்தில் 'உத்ஸர்ஜனம்' என்ற கர்மாவினைச் செய்து அந்த ஆண்டுக்கான வேத பாடத்தை முடிப்பர்.
பின்பு வரும் ஆறுமாதங்களும் வேதம் தவிர்த்து சிக்ஷை (ஒழுக்கம்), வியாகரணம் (மொழி இலக்கணம்), சந்தஸ் (ஒலியியல்), நிருக்தம் (சொல் இலக்கணம்), ஜ்யோதிஷம் (ஜோதிடம்), கல்பம் (காலம்) ஆகிய பிற துறைசார்ந்த கல்விகள் கற்பிக்கப்படும்.
இப்படியே 12 ஆண்டுகள் கல்வி பயில வேண்டும் என்பது விதி.
பிரம்மசாரிகளாக இருந்து கல்வி கற்றுமுடித்தபின் கற்றதை மற்றவர்களுக்கு அத்யாபனம் (கற்றுக்கொடுப்பது) செய்யவேண்டும்.
இல்லறத்தில் ஈடுபட்டுப் பிறருக்கு முறையாகக் கற்ற வேதத்தைப் பிறருக்குக் கற்றுக்கொடுக்க முடியாதவர்கள், கற்ற பாடங்கள் மறந்துவிடாதபடிக்குத் தமக்குத் தாமாகவே அவற்றைச் சொல்லிப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதற்காக, பிரம்மசாரிகள், கிரகஸ்தர்கள் ஆகிய அனைவரும் உபாகர்மா நாளில் வேதாரம்பத்தைத் தொடங்க வேண்டும்.
அவ்வாறு செய்வதன் தொடக்கமாகவே உபாகர்மா நடைபெறுகிறது.
உபாகர்மா செய்யும் நாள் அன்று காலை சந்தியாவந்தனம் செய்து பின் காமோகாரிஷீத் ஜபம் செய்ய வேண்டும்.
வேத அத்யயனமும், உத்ஸர்ஜனமும் உரிய காலத்தில் நம் அன்றாட வாழ்வில் செய்ய இயலாதவர்கள் இந்த காமோகாரிஷீத் ஜபம் கட்டாயம் செய்ய வேண்டும்.
ஆண்டுமுழுவதும் அறிந்து பாபம் செய்யவில்லை என்பதைச் சொல்லி நாம் செய்த காமம், கோபம் ஆகிய பாவங்களிலிருந்து விடுபட வேண்டும் என இந்த ஜபம் செய்யப்படுகிறது.
அதன்பின் யக்யோபவீதம் அணிந்து ஹோமங்கள் செய்வர்.
உபாகர்மாவின் முக்கியமான சடங்கு வேதாரம்பம்.
வேதக் கல்வியைத் தொடங்குவது என்று பொருள். வேதாரம்பத்தில் 'மஹேஸ்வர சூத்ரம்' சொல்லப்படும்.
இதன் பொருளை மகாபெரியவர் ஒருமுறை உபாகர்மாவின் பெருமைகளைச் சொல்லி, அதில் இடம்பெறு 14 சப்தங்களுடைய மஹேஸ்வர சூத்திரத்துக்கு விளக்கம் கூறினார்.
"பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!
நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது! இந்தப் பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா.
மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால, அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது. 'அ இ உண், ருலுக், ஏ ஒங், ஐ ஔச், ஹயவரட், லண், ஞமங் ண நம், ஜ ப ஞ், க ட த ஷ், ஜப க ட த ச, க ப ச ட த சடதவ், கபய், சஷஸர், ஹல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மொழியின் தொடக்கமாக அமையும் சப்தங்கள் தொடங்கி, வேதங்களின் உட்பொருளாக அமையும் காயத்ரி மந்திரம் வரை நீள்வது இந்த ஆவணி அவிட்டம் எனப்படும் உபாகர்மா.
இந்த நாளில் சிரத்தையோடு கடைப்பிடித்து முறைப்படி உபாகர்மாவினைச் செய்வது உலக நன்மைக்கு வழிவகுக்கும் என்கின்றனர் பெரியோர்கள்.

No comments:

Post a Comment