Thursday 26 August 2021

குழுவாகச் செய்யப்படும் வேலை வெற்றியை எளிதில் பெற்றிடும்.

 குழுவாகச் செய்யப்படும் வேலை வெற்றியை எளிதில் பெற்றிடும்.

பல நேரங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால்தான் நடந்ததாக நினைக்கின்றனர். ஆனால்!, மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது...
ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாகச் செய்யப்படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது...
ஏனெனில்!, கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது, குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும்போது நமக்கு சகிப்புத் தன்மை, மற்றும் பலவித சூழ்நிலைகளைக் கையாள்வது போன்ற சிறப்புப் பண்புகள் வந்து சேரும்...
கோடை காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப் பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்க விடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராகப் பறந்தது...
அது அடுத்த நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாகப் பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் நகர முதல்வர் (மேயர்). இந்த காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு...? என மக்களிடம் கேட்டார்...
"நான் தான்” என்றான் ஒரு சிறுவன். “நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன். நானே அதை பறக்க வைத்தேன்” என்றான் அவன்...
ஆனால் காற்றோ!, "நான்தான் காற்றாடி பறந்ததற்குப் பொறுப்பு” என்றது. என்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும், சரியான திசையிலும் பறக்கச் செய்தது. நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்திருக்கவே முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது காற்று...
இல்லை!, நான்தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்றாடியின் வால், நான்தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாக பறக்கவும் காரணம். நான் இல்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி தரையில் விழுந்து இருக்கும். அதை அந்தச் சிறுவனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே!, நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அந்த காற்றாடியின் வால்...
இப்போது நீங்களே கூறுங்கள், யார் உண்மையில் காற்றாடியை பறக்க வைத்தவர்கள்.
ஆம் நண்பர்களே
எந்தவொரு செயலையும், "நான்தான் செய்தேன்", "என்னால்தான் அந்த செயல் செய்யப்பட்டது" என்று தன்னைப் பற்றி பெருமை கொள்ளாமல், நாங்கள் அல்லது எங்களது கூட்டு முயற்சியால் சாதித்தோம் அல்லது செய்யப்பட்டது போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்.
நிர்வாகவியலார்கள் இதைத்தான் கூட்டு முயற்சி (Team Work) என்பார்கள். தன் முயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும்.

No comments:

Post a Comment