Monday 12 April 2021

எதையும் எதனோடும் ஒப்பிடாமல் இருப்பது நலம்.

 எதையும் எதனோடும்

ஒப்பிடாமல் இருப்பது நலம்.
ஒரு பேராசிரியர் ஒரு ஜென் ஞானியிடம்
சென்று, "நான் ஏன் உங்களைப்போல
இல்லை? உங்களைப்போல என்னால் ஏன்
அமைதியாய் இருக்க முடியவில்லை ?
உங்களுக்கு இருக்கும் ஞானம் எனக்கு ஏன்
இல்லை ?" என்று கேட்டார்
ஞானி சொன்னார், "இன்று முழுவதும்
என்னுடன் இருந்து என்னை கவனித்து
வா. எல்லோரும் சென்றவுடன் உன்
கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.
அன்று முழுவதும் ஏராளமான மக்கள்
ஞானியை வந்து தரிசித்து சென்றனர்
மாலையில் எல்லோரும் போன பின்
பேராசிரியர் ஞானியிடம் தன் கேள்விக்கு
பதில் சொல்ல ஞாபகப்படுத்தினார்.
அன்று பௌர்ணமி, முழு நிலவு வானில்
அழகுடன் ஜொலித்தது.
ஞானி கேட்டார், "இன்னுமா உனக்கு பதில்
கிடைக்கவில்லை? நான் மக்களுக்கு
சொன்ன பதில்களைக் கவனித்திருந்தால்
உனக்கு பதில் கிடைத்திருக்கும்
பரவாயில்லை வெளியில் வா. இந்த
அமைதியான தோட்டத்தில் முழு நிலவின்
அழகினைப் பார். இந்த நிலவொளியில்
இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள
செடியும் எவ்வளவு அழகாய்
இருக்கின்றன.
பேராசிரியர் பொறுமை இழந்து தன்
கேள்விக்கு பதில் சொல்லுமாறு கேட்டார்
ஞானி சொன்னார், "உன் கேள்விக்கு பதில்
சொல்கிறேன். இந்த நீண்ட மரமும் அதன்
அருகில் உள்ள செடியும் வெகு நாட்களாக
என் தோட்டத்தில் இருக்கின்றன. ஆனால்
ஒரு நாளும் இந்த செடி தான் ஏன் இந்த
பெரிய மரம் போல இல்லை என்று
மரத்திடம் கேட்டதில்லை.
அதேபோல மரமும் அந்த செடியிடம் தான்
ஏன் செடிபோல இல்லை என்று
கேட்டதில்லை. மரம், மரம் தான். செடி, செடி
தான். மரம் தான் மரமாயிருப்பதிலும், செடி தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன்
தான் இருக்கின்றன என்றார்.
ஒப்பீடு தான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.

No comments:

Post a Comment