Tuesday 30 November 2021

உண்மையான அன்பு.

 உண்மையான அன்பு.

அன்பு இந்த அழகிய சொல்லில் தான் இவ்வுலகமே கட்டுண்டு இருக்கிறது. உங்களைச் சுற்றி உள்ள அனைத்து உயிர்களிடமும் அன்பைச் செலுத்துங்கள், நாம் என்ன கொடுக்கிறோமோ அது மறுபடியும் நமக்கு கிடைக்கும் அதனால் விலை மதிப்பில்லாத அன்பை அனைவருக்கும் அள்ளிக் கொடுங்கள்.
"கண்ணா சாப்டியா?" என்று வினவும் தாயின் அன்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
தந்தை அன்பை மனதில் வைத்துக் கொண்டு தன் குடும்பத்திற்காகவே தன் ஆசைகளை எல்லாம் தியாகம் செய்து நம் கண் எதிரில் வாழும் கடவுள்.
டேய் மச்சான் நான் இருக்கேன்டா என்ற ஒற்றை சொல்லில் அன்பை புரிய வைப்பார்கள் நம் நண்பர்கள்.
உங்கள் இல்வாழ்க்கைத்
துணையின் அன்பு அவர் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்.
நாம் இந்த மண்ணில் வாழும் வரை அன்பை அனைவருக்கும் வாரி வழங்குவோம், அன்பிற்கு காசு பணம் அந்தஸ்து இவை எதுவும் தேவை இல்லை.
கடினமாக பேசுபவர்கள் அன்பு இல்லாதவரும் அல்ல, சிரித்து சிரித்துப் பேசுபவர்கள் அனைவரும் உண்மையான அன்பு
கொண்டவரும் அல்ல( அனுபவம்).
உங்கள் அன்பு உங்கள் குடும்பத்திற்காக மட்டும் என்று நினைத்து நத்தையைப் போல் சுருக்கிக் கொள்ளாதீர்கள். அன்புக்காக பல பேர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேவையான தருணத்தில் கிடைக்காத அன்பு பயனற்றது.
பெட்டி நிறைய அரிசி இருந்தாலும் அதை வடித்து உண்டால் மட்டுமே பசி தீரும், அதை அப்படியே வைத்திருந்தால் புழுத்துவிடும் அதுபோல் தான் அன்பும் அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைக்காதீர்கள். உங்களால் முடிந்த விதத்தில் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் பார்க்கும் அனைத்து நபர்களிடமும்
இன்றைய நாள் நல்லபடியாக இருக்கட்டும்" என்று கூறுங்கள்.
நம்மிடம் யாராவது அவர்களின் துயரங்களைக் கூறினால் அன்போடு காது கொடுத்து கேட்டு " நான் இருக்கிறேன் உனக்காக"* என்று புரிய வைக்க வேண்டும். நான் என்னும் அகந்தையை ஒழித்துவிட்டாலே அன்பு ஆட்சிக்கு வந்து விடும். நாம் வாழும் காலத்தில், சம்பாதிக்கும் பணம் நம் இறுதி பயணத்தில் நம்மோடு வரப்போவதில்லை ஆனால் நாம்
பிறரிடம் காட்டிய அன்பும் பாசமும் பல தலைமுறைகளுக்குத் தொடரும்.

No comments:

Post a Comment