இன்றைய பொழுது இனியது.
ஒருமுறை ஒரு அரசன் பெரும் போர் ஒன்றிலே வெற்றிவாகை சூடினான். பெரும் களிப்பில் இருந்த அரசன், தன் தளபதிகளை அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனைக் கேளுங்கள் தருகின்றேன் என்று ஆணையிட்டான்.
இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி, தளபதிகள் மாளிகை, கோட்டைகள் கட்டித் தருமாறு கேட்டனர், ஆனால் ஒரு தளபதி மட்டும் தனக்கு கொஞ்சப்பொன்னும் பொருளும், இரண்டு வருடத்திற்கான அரச விடுமுறையும் தேவை என்று கேட்டு அன்றே பெற்றுக்கொண்டான்.
இதனைப் பார்த்த மற்ற தளபதிகள், அவனைப் பார்த்து, நீ ஒரு முட்டாள், மன்னனிடம் இவ்வளவு அற்பமான கோரிக்கையை கேட்டுப் பெற்றுக் கொண்டாயே, எங்களைப்போல கோட்டை கொத்தளங்கள் என்று கேட்டிருக்கலாமே என்றார்கள். அதற்கு அந்த தளபதி நானா முட்டாள்? எனக்கு இன்றைக்கே நான் கேட்டது கிடைத்துவிட்டது.
நீங்கள் கேட்பது கிடைக்க சில காலம் ஆகலாம். கோட்டை கொத்தளங்கள் கட்ட வருடக் கணக்காகும், ஒருவேளை மன்னன் மற்றுமொரு போரில் தோற்றுவிட்டால், உங்கள் பாடு அதோகதிதான், இன்று கிடைத்தது எனக்குப் போதும், என்று பதில் சொன்னான்.
நாளை நாளை என்று எண்ணி, இன்றைய பொழுதைத் தொலைத்து விடக்கூடாது.
கடவுள் கொடுத்த இன்றைய நாளுக்கு நன்றி சொல்லி வாழ்வைத் தொடங்குங்கள்.
No comments:
Post a Comment