Friday 22 March 2024

பக்குவ நிலை பக்குவமற்ற நிலை .

 பக்குவ நிலை பக்குவமற்ற நிலை .

எகிப்து மன்னன்
பாரூக் பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான்
மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.
ஆனால் அரண்மனை வாசத்திலே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தர்
கௌதம புத்தர்
ஆன வரலாறும் உண்டு.
கல்லூரியில் படிக்கும் போது ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.
கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.
இளமைக்காலத்து ஆரவாரம்
முதுமை அடைய அடைய குறைந்து வருகிறது.
ஒவ்வொரு
துறையிலும் நிதானம் வருகிறது.
இளம்பருவத்தில்
இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தமற்றதாகத் தோன்றும்.
வாழ்வில் அடிபட்டு வெந்து நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது
புத்தியில் படும்.
பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.
பக்குவம் வர வர
ரத்தம் வற்ற வற்ற
இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.
நடைமுறைக்கு ஒத்த சிந்தனை பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.
கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதைகளையும் மர்மக்கதையும் படிப்பதில் அவன் கவனம் செலுத்துவான்.
காதலித்து தோற்ற பின் தான்
அவனுக்கு பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.
விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்கு பெயர் போனது.
எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு அதைவிட உலகமே கிடையாது என்று வாதாடும்.
எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.
பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டும் அல்ல அங்கு சிலையில் இருக்கும் அழகு கூடத் தெரியாது.
50 வயதில் கோயிலுக்கு போனால் சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.
இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டும் இல்லை பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.
ஏன் உடம்பு கூட 20 வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.
40க்கு மேலே தான் இது வாய்வு இது பித்தம் என்ற புத்தி வருகிறது.
டென்ஷன் என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை
முறுக்கான நிலை என்று அதைக் கூறலாம்.
அந்த நிலையில் எதையும் செய்யலாம்.
இப்படியும் செய்யலாம் என்கிற திமிர் வருகிறது.
அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு இதைத்தான் செய்யலாம்
இப்படித்தான் செய்யலாம்
என்ற புத்தி வருகிறது.
ஞான மார்க்க பக்குவம் அப்படிப்பட்டதுதான்.
உள்ளம் உடலுக்குத் தாவி உடல் ஆன்மாவுக்கு தாவிய நிலையை பக்குவப்பட்ட நிலை.
தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை அதையே அழிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சி அடைகிறது. அதற்குப் பிறகு அந்த தேளிற்கு கூட அனுதாபம் காட்டும் ஞானியாக அது மாறிவிடுகிறது.
பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.
ஆரம்பத்தில் இதுதான் சரி என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு
பின்னால் இது தவறு என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.
சரியாக கணக்கிட்டால் மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்
முதற்கட்டம் -
ஒன்றுமே புரியாத உணர்ச்சி கூத்து.
இரண்டாவது கட்டம் -
ஏதோ இருப்பதாக ஆனால் தெளிவாகத் தெரியாத மயங்கிய நிலை.
மூன்றாவது கட்டம் -
பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும் நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை.
இந்த மூன்றாவது நிலையை முதற்கட்டத்திலே எழுதியவர்கள் பலர் உண்டு.
சுவாமி விவேகானந்தரைப் போல வளைந்து கொண்டே
வளர்ந்த மரங்கள் உண்டு.
அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.
மற்றவர்கள் அனுபவத்தின் மூலமாகதானே பக்குவ நிலையை அடைய வேண்டி இருக்கிறது.
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும்
நடுவே தடுமாறும் மனிதர்கள்
நாட்டிலே மிக அதிகம்.
ஒன்று தூங்குவது என்றால்
நிம்மதியாக தூங்கி விட வேண்டும்.
விழிப்பதென்றால்
சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.
தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலன் கிட்டாது.
விழிப்பின் பலனும் கிட்டாது.
மனப்பக்குவம் என்பது
அனுபவங்கள் முற்றி பழுத்த நிலை. அந்த நிலையில்
எதையுமே இல்லை என்று மறுக்கின்ற எண்ணம் வராது.
இல்லை என்று சொல்பவனுக்கு
எந்த புத்தியும் தேவையில்லை
எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.
ஆனால் உண்டு என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலை நாட்ட போதுமான அறிவு தேவைப்படும்.
பூமிக்கு கீழே என்ன இருக்கிறது
என்று கேட்டால் எதுவுமே இல்லை
என்று குழந்தை கூட
பதில் சொல்லி விட முடியும்.
ஆனால் அடியிலே நீர் அதன் கீழே நெருப்பு என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.
பாத்திரம் செய்பவனுக்கு
பல நாள் வேலை.
போட்டு உடைப்பவனுக்கு
ஒரு நாள் வேலை.
நாத்திகன் எப்போதும் தெளிவாக இருக்க முடியும். காரணம் எதை கேட்டாலும் எந்திரம் போல் இல்லை என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்
ஆனால் ஆத்திகனோ விபூதிக்கு ஒரு காரணம்.
குங்குமத்திற்கு ஒரு காரணம். சொல்லியாக வேண்டும்.
சொல்வது மட்டுமல்ல
எதிரியையும் ஒப்புக்கொள்ள
வைக்க வேண்டும்.
ஆத்திகன் பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.
ஜனனம் மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.
அப்படி ஆராய்ந்து இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.
வேதங்களின் முடிவையே
விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால் விஞ்ஞானமும் அறியாமல் மெய்ஞானமும் மறையாமல் அஞ்ஞானத்தை கொண்டு உழலும் நாத்திகனுக்கு எல்லாம் இயற்கையாக நடக்கின்றன என்று சொல்லத் தெரிகிறதே தவிர அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
பக்குவ நிலைக்கும்
பக்குவமற்ற நிலைக்கும்
வேறுபாடு இதுதான்.
கோயிலுக்கு போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்.
அப்படி கோயிலிலே என்ன இருக்கிறது என்று நாத்திகன் கேட்கிறான்.
அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில் அந்த தேங்காய்க்குள்
என்ன இருக்கிறது என்பது
அவனுக்குத் தெரியுமா.
அதில் வழுக்கையும் இருக்கலாம்.
காயும் இருக்கலாம்.
ஆகவே உடைத்த பின்பே காயை கண்டுகொள்ளும் மனிதன் உணர்ந்த பின்பு தெய்வத்தை காண முடியும் என்பது உறுதி.
கடவுளே இல்லை என்று வாதாடியவன் எவனும் எனக்கு மரணமே இல்லை என்று வாதாட முடியவில்லை.
மரணம் என்று உணரப்படும் போதே சிலருக்கு பக்குவம் வருகிறது.
மிகப் பெரிய நாத்திகர் கூட தமது அந்திமக்காலத்தில் யார் கொடுத்த விபூதியையும் பூசிக் கொள்கிறார்கள்.
மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று
நிச்சயமாக தெரியும் வரை
ஈஸ்வரன் ஒருவன் இருப்பது உறுதி.
*✒️ ~ கவியரசு கண்ணதாசன்*
*📚அர்த்தமுள்ள இந்துமதம்*

No comments:

Post a Comment