Saturday 26 February 2022

கொடுப்பதும் பெறுவதும்.

 கொடுப்பதும் பெறுவதும்.

பூமியில் வாழும் மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது...
ஆனால்!, விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு, கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன...
ஆனால்!, மனிதனை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்தே அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...
வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை...
படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை...
தலைமுறைக்கு பெண்ணின் உதவி தேவை...
இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம்...
ஆனால்!, தற்போதைய காலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதை பணம் என்ற அளவுகோலைக் கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்...? - என்று வீணே வழக்குரைக்கின்றான்...
அப்படி கேள்வி கேட்போருக்கு ஒரு செய்தி இதோ...!
ஒருவர் அவரின் நண்பரின் கடைக்குச் சென்றிருந்த போது, அழகிய பெண் ஒருவர் வந்து 500 ரூபாய்க்குப் கரிக்கோல் மற்றும் மைக்கோல் வாங்கிச் சென்றிருக்கிறார்...(கரிக்கோல் - பென்சில், மைக்கோல் - பேனா)
நண்பர் வந்தவரிடம் "இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா...?” என்று கேட்டிருக்கிறார்...
”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் வந்தவர்...
“இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார். ஆனால் அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா...?
இந்தச் சூழலிலும் வெறும் 5000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். வாங்கும் சம்பளத்தில் 500 ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு பென்சில், பேனாவாக வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் வந்தவரின் நண்பர்...
மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும்.
இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு வழங்கிச் சென்றது.
மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்...
ஆம் நண்பர்களே
இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்த நாம் , மனித்தன்மை பெற்று வாழ வேண்டும் . எல்லா உயிர் இனங்களைக் காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்குத்தான் இருக்கிறது.
மனிதனாக பிறந்த நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்து விட்டுச் செல்ல வேண்டும்.
வந்தோம் , பிறந்தோம் , வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், அடுத்த வரும் நம் தலைமுறை நன்கு வாழ்ந்திட அவர்களுக்கு நல் வாழ்வு வாழ வழி வகைகள் செய்யவேண்டும், நாம் இன்று எதிர்கொள்ளும் அல்லல்கள் வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் தூய பூமியாக விட்டுச் செல்வோம்.

No comments:

Post a Comment