Friday 18 February 2022

தவறானவர்களால் தடுமாற்றமே.

 தவறானவர்களால் தடுமாற்றமே.

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெலல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும் போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது.
முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள்,
உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?
இடித்துரைக்க, எடுத்துச் சொல்ல நல்ல மனிதர்களைத் தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்.
மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள்.
எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பைப் போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.
நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. காரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். கார் திடீரென்று நின்றது. ஓட்டுனர் சீட்டுக்குப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரை டிரைவர் தட்டி எழுப்பினார்,
“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கித் தூங்கி வழியறதப் பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக் கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தைத் தொடர ஆரம்பித்தார்.
மற்ற நண்பரால் தூங்க முடியவில்லை. ஓட்டுனர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார்...
ஆம் நண்பர்களே
பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரைப் பொறுத்துத் தான் இருக்கிறது.
லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடைய வேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாகத் தேடி நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதைப் போலவே உங்களைப் பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்.
எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகில் உள்ள அனைவரும் உங்களை விரும்புவார்கள்.
கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்... உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment