Friday 20 November 2020

கந்த சஷ்டி விரதம் ஸ்பெஷல்

 கந்த சஷ்டி விரதம் ஸ்பெஷல் !

இன்று அன்னையிடமிருந்து வேல் பெற்றுக் கொள்ளும் திருநாள்!!!
சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார்.
சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.
சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.
வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள்.
அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள்.
அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது.
தீராத வினைகள் யாவையும் தீர்க்கும் கந்தவேள் நம் சொந்தவேள் என்பார் வாரியார் ஸ்வாமிகள்.
அவன் கைவேலோ துள்ளி வந்து நம் தீராத வினைகள் யாவையும் தீர்க்கும்.
அதைத் தான் பாரதியும்,
"துள்ளி வருகுது வேல்! பகையே சுற்றி நில்லாதே போ!" என்று பாடினார்.
பகை என்பது இங்கே நம் உள்ளேயே குடி கொண்டிருக்கும் பகை மட்டும் அல்ல.
சுற்றி இருக்கும் பகை என நாம் கருதும் அனைத்தையும் மாற்றி அருளும் வல்லமை அவனுக்கு மட்டுமே உண்டு.
கந்தபுராணத்தில் தாரகன், சிங்கன், சூரபத்மன் என்ற மூன்று அசுரச் சகோதரர்களின் கதை கூறப்படுகின்றது.
தாரகன் உலகமே உண்மை என்று வாழ்ந்தவன். சைவசித்தாந்த நிலையில் அவனை “மாயா மலத்திற்கு” உவமிப்பர்.
சிங்கன் கன்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; அவனைக் “கன்ம மலத்திற்கு” உவமிப்பர்.
சூரபத்மன் “ஆணவ மலம்”. இறுமாப்பே அவன் இயல்பு.
இம்மூவரையும் முறையே அழித்தமை ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே இயல்பாகச் செய்ய வல்ல பெருஞ்சிறப்பு.
வேல் என்பதே ஞான சக்தி !
மயில் என்பதோ இச்சா சக்தி !
சேவல் என்பது கிரியா சக்தி !
கிரியா சக்தி நம்மை உறக்கத்திலிருந்து விழித்தெழுப்ப ,
இச்சா சக்தி நம் எண்ணங்களுக்கு வலிமை சேர்க்க ,
ஞான சக்தியாய் வேலாயுதம் நம்மை செயல் புரிய காத்தருளட்டும்..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !



No comments:

Post a Comment