Wednesday 16 November 2022

டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.

 டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நண்பகல் வேளையில் தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வருகை தந்தால், பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் எனக் கருதி எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் திரு.அப்துல் கலாம் அவர்கள்.
திருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் அவரை ஆலயத்துக்குள் வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள்.
அனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட திரு.அப்துல் கலாம், ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை.. அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
மீண்டும் அழைத்தார்கள்.. இன்னும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார் திரு.அப்துல் கலாம்.
பின்னர் பிரதான அதிகாரியைப் பார்த்து, "பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான், நான் ஆலயத்தில் நுழைய வேண்டும்..அதுதானே உங்கள் ஆலயத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் விதி!
இந்திய ஜனாதிபதி என்றாலும், அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற விரும்பவில்லை... எங்கே அந்தப் புத்தகத்தைக் கொண்டு வாருங்கள்.. நான் கையெழுத்திட வேண்டும்" என்றார் திரு.கலாம்.
கூடியிருந்த அனைவரும் ஒரு கணம் திகைத்து நின்றனர்.
"இந்தப் பண்பு வேறு யாருக்கு வரும்!.." என்று அத்தனை பேரும் ஆச்சர்யப்பட்டனர்.
அந்தப் பதிவேடு கொண்டு வரப்பட்டதும், அதில் கையெழுத்திட்ட பின்னர், "பங்காரு வாகிலி" எனப்படும் தங்க வாசலைக் கடந்து ஏழுமலையானைத் தரிசித்தார் திரு.அப்துல் கலாம்.
அப்போது பாசுரங்கள் பாடப்பட்டன.
திருமலையின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டது...சடாரி சாற்றப்பட்டது.
தரிசனம் முடிந்து வெளியே வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார் திரு.கலாம்.
மற்ற ஆலயங்களைப் போல் திருமலையில் மட்டும், பெருமாளுக்குச் சாற்றப்பட்ட மாலைகள், மற்றவருக்குச் சாற்றப்படுவதில்லை.
காரணம், இந்த மலர்களும், மாலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய பிறகு, பெருமாளுக்குக் கொடுத்தவையாக ஐதீகம்.. எனவே, பெருமாளுக்கு மட்டுமே அந்த மலர் மாலைகள் சொந்தம்.
இதன் காரணமாகத் திருப்பதிக்கு வருகை தருகின்ற எப்பேர்ப்பட்ட முக்கியஸ்தர்களுக்கும் சகல விதமான மரியாதைகளும் இருக்குமே தவிர, மாலை மரியாதை மட்டும் அங்கே கிடையாது.
இந்த நியமம் மீறாமல் பார்த்துக் கொண்டார் திரு.கலாம்.
வலம் வந்து முடித்த அப்துல் கலாம் அவர்களுக்கு, அர்ச்சகர்கள் லட்டு, பட்டு வஸ்திரம், என்றெல்லாம் பிரசாதங்களை வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.
அப்போது அவர் அர்ச்சகர்களைப் பார்த்து, "ஒரு நிமிஷம்.."... என்று சொல்லிவிட்டு, "தனிப்பட்ட முறையில் என் பெயர் சொல்லி அர்ச்சனை எதுவும் செய்ய வேண்டாம்.. இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். சகல வளங்களையும் பெற வேண்டும்...என்று அர்ச்சனை செய்து, வாழ்த்தி, அந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள்" என்று சொன்னபோது, அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள்.
எப்பேர்ப்பட்ட உயரிய சிந்தனை திரு.அப்துல் கலாம் அவர்களின் மனதுக்குள் இருந்தால் "இந்தியா" என்ற பெயரை உச்சரித்துப் பிரசாதம் தாருங்கள் என்று கேட்டிருப்பார்!
கட்டுரை ஆசிரியர் - நன்றி:
சொற்பொழிவாளர் திரு பி. சுவாமிநாதன்
நூல்: திருப்பதி - வியக்க வைக்கும் அற்புத கட்டுரைகள்

No comments:

Post a Comment