Wednesday 9 November 2022

அடிமையின் அடிமை.

 அடிமையின் அடிமை.

மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து இறங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், ஒளியும் நிறைந்து காணப்பட்டது.
உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், என்னுடன் “மெசடோனியா” வந்துவிடுங்கள்.
உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிட்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சாண்டர்.
யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியைத் தருகிறது”, என அமைதியாகக் கூறினார்.
தனது வேண்டுகேளை நிராகரித்ததால் கோபம் தலைக்கேரிய அலேக்சாண்டர், தன் இடைவாளையுருவி யோகியை நோக்கி பேசலானார்,
“மடையனே நான் யாரென்று தெரியுமா, நான் தான் மாவீரன் அலேக்சாண்டர். என் ஆணையை மறுத்ததற்கு இப்பொழுதே என்னால் உன்னைக் கொல்ல முடியும், மறியாதையாக நான் சொல்வதைக் கேள்” என்றார்.
யோகியோ தைரியமாக,
“உங்களால் மாயையான என் உயிரைக் கொல்ல முடியாது. என் உயிரை போர்த்திய உடலை மட்டுமே கொல்ல முடியும். இந்த உடல் என் உயிரைப் போர்த்திய ஆடை மட்டுமே”, என்று அமைதியாகக் கூறி மீண்டும் தொடர்ந்தார்,
“அரசே உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் என் அடிமையின் அடிமை” என்று சிறிதும் தயங்காமல் புன்னகையுடன் கூறினார்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்”, என்று கோபத்துடன் கேட்டார் அலெக்சாண்டர்.
“என்னால் என் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியும், கோபம் எனது அடிமையாகும், ஆனால் நீங்களோ எளிதாக உங்கள் கோபத்திற்கு ஆளாகி விடுகிறீர்கள், நீங்கள் கோபத்தின் அடிமை, அதனால் தான் உங்களை என் அடிமையின் அடிமை என்கிறேன்”, எனக் கூறினார்.
யோகியின் போதனை அவர் தம் தவறை உணரச் செய்தது.
வாயடைத்தவனாய் அங்கிருந்துச் சென்றார் அடிமையின் அடிமையான மாவீரன் அலெக்சாண்டர்.
கோபம் என்பது மனிதர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மோசமான வைரஸ் ஆகும்.
‘நான் செய்வதும்.., சொல்வதும் தான் சரியானவை, மற்றவர்கள் செய்வது எல்லாம் தவறு' என்கிற மனித எண்ணத்தின் சிறு புள்ளியில் இருந்துதான் பெரும்பாலான கோபங்கள் பிறக்கின்றன.
இந்த உலகில் எல்லாமுமே நம்முடைய விருப்பப்படியும் நம்முடைய திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை என்கிற யதார்த்த உண்மையை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் இருக்கும் திசைப் பக்கம் கூட கோபம் எட்டிப் பார்க்காது.
கோபம் இல்லாத மனிதனது வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் தித்திப்பாய் நகர்ந்துகொண்டிருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
மனித வாழ்வில் தவிர்க்க வேண்டிய உணர்ச்சிதான்
இந்த பொல்லா கோபம்.
அதனால் யாருக்கும்
எந்த நன்மையும் இல்லை.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பெரியோர் வாக்கு.
கோபத்தை கட்டுப்படுத்தி மகிழ்ச்சியான
வாழ்வை நாம் பெறுவோம்.
1

No comments:

Post a Comment