வெல்வது என்பது வேலே அன்றோ
18 - 7 - 2020
வெற்றிக் கரத்தில் வேலினை ஏந்திடும்
முற்றும் அறிந்த எம் முதலோன் வாழ்க
கறுப்பர் என்னும் கயவர் கூட்டம்
வெறுப்பை உமிழும் வீணர் கூட்டம்
அடிப்படை யாய்ஓர் அறிவிலி இவரைப்
பொடிப் பொடியாக்கும் பெருவேல் வாழ்க
கண்ணனும் கருப்பு, கார்முகில் ஒத்த
அண்ணல் ராமன் அவனும் கருப்பு
கருப்ப சாமிஎம் கடவுள் அவரவர்
விருப்ப மானதாய் வண்ணமிங்குண்டு
கருமை எங்கள் தோலிலும் உண்டு
அருமை என்றே ஆரா திக்கிறோம்
இறையற்(கு) உரித்தாம் இனிதாம் நிறமதை
முறையின்(றி) இருக்கும் மூடர்கூடம்
கறுமைப் பெயரால் கரிபூசு கின்றார்
சிறுமை நெறியால் சீர்குலைக்கின்றார்
திரித்துப் பேசித் தீமை விதைத்தார்
எரித்துப் போன எருவா கினரே
அரிஎன் றேதனை ஆணவ மாக
நரிஒன் (று) அன்றோ நினைத்தது மாய்ந்தது
வம்பினை வாயால் வாங்கிக் கொண்டு
கம்பியை இன்று கணக்கெடுக்கின்றார்
அறை கூவி ஆர்ப்பரித் தவரே
சிறையில் எலியெனச் சிக்கிஅழு கின்றார்
களைக ளெல்லாம் களைபவன், உலகத்
தளைகள் அறுக்கும் தலையவன்,
அன்போடு
கந்தா என்று கழன்றிடப் பாசப்
பந்தாய் வந்து பற்றிக் கொள்பவன்
சிந்தைக்(கு) எட்டாச் சிவனாம் அந்தத்
தந்தைக் கேமறை தத்துவம் சொன்னவன்
இத்தகை யோனை இழிபிறவிஇவர்
மெத்தனம் கொண்டு மடமை செய்தனர்
காட்டு மிராண்டிஇக் கயவர் கூட்டம்
ஆட்டும் வாலை அடக்கி ஒடுக்கி
விற்பனைக்(கு) அறிவை விற்றவ ராம்இவ்
அற்ப ருக்குநல் அறிவு புகட்டினன்
வேலைப் பழித்தீர் வீழ்ந்தீர் இன்று
காலைப் பிடித்துக் கண்ணீர் விடுகிறீர்
உய்ய உமக்கினி ஒரு வழி சொல்லுவம்
கையும் காலும் கூப்பிஎம் வேலைத்
தொழுது ஏத்துவீர் துலங்கி டுவீரே
பழுது வாழ்வெனப் பாழா காதீர்
வேலைத் தொழுவோம் வேல்பிடித் தவனின்
காலைத்தொழுவோம் கந்தா வாழிய
முற்றும் அறிந்த முருகவேல் வாழ்க
வெற்றிவேல் எங்கள் வீரவேல் வெல்க
வெல்வது என்பது வேலே அன்றோ
வல்வினை போக்கிட வேறெதும் உண்டோ
சுந்தர்
No comments:
Post a Comment