Saturday 24 September 2022

மன உறுதி ஒன்றே தீர்வு.

 மன உறுதி ஒன்றே தீர்வு.

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும் . இன்பமோ துன்பமோ அனுபவம் நம்மைப் பலப்
படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும் மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வைப் பறி கொடுக்கிறான்.
இவ்வுலகில் உள்ள மற்ற உயிரினங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை.
காரணம் அவைகளுக்கு வாழ்க்கையின் முடிவைப் பற்றிய பயமில்லை. அந்த வகையில் அவைகளுக்கு அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதற்கு காரணம், அறிவு மட்டும் வாழ்க்கைக்குப் போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது.
அது என்ன தன்னம்பிக்கை, மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையைப் பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மன உறுதியொன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் வெற்றி கொள்கிறான், கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ள மாட்டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளைத் தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளைப் பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்.
ஆனால் தோல்விக்குப் பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைத் தேடிக் கொள்கிறான்.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். இன்பமும், துன்பமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்.
பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகம் இல்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, தற்கொலைகள், இப்போதுதான் அதிகமாகி வருகிறது. எந்த ஆன்மீகமும் இவர்களை காப்பாற்றவில்லை.
வாழ்க்கை என்பதே ஒரு போராட்டமே. போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றிபெறுவது குதிரைக்கொம்பே.
வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு. அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை, அதை நிறைவேற்றுங்கள்.
வாழ்க்கை என்பது, ஓர் குறிக்கோள், அதைச் சாதியுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக் கொள்ளுங்கள்.
அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதை நடத்தி முடியுங்கள்.

No comments:

Post a Comment