Monday 12 September 2022

வாழ்க்கை எளிமை ஆகிவிடும்

 வாழ்க்கை எளிமை ஆகிவிடும்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் நம்ப முடியாத அளவிற்கு சிக்கலானதாக மாறியிருக்கிறது.
இந்த சிக்கல் நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. நாம் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். அடிமனத்திலிருந்து வெறுக்கும் செயல்களை ஓய்வின்றிச் செய்து கொண்டிருக்கிறோம்.
மிகையான செயல்களில் கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்கிறோம். சிக்கலான எண்ணங்களால் மனங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறோம், நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படியொரு வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.
மனங்களையும், நம் கலாச்சாரமும் சுரண்டும் இந்த வாழ்க்கையைத்தான் நவீன வாழ்க்கைமுறை என்றெண்ணி வாழ முற்படுகிறார்கள்.
நமது மனம் எண்ணற்ற எண்ணங்களால் சூழ்ந்திருக்கும்போது வாழ்க்கை பெரிதும் சிக்கலானதாகவும், அழுத்தம் நிறைந்ததாகவும் மாறிவிடுகிறது.
இத்தகைய சிக்கலான ஓர் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதன் தாக்கம் நம்மிடம் இருக்கவே செய்யும். ஆனால்!, எண்ணங்கள், செயல்கள், மனப்பான்மை போன்ற அம்சங்களால் நம்மால் நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ள முடியும்.
நம்மைச் சுற்றி நடக்கும் குழப்பங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். அத்துடன், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் ஊக்கவிக்க முடியும்.
நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யும்போது வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. பிடிக்காத செயல்களை ஏதோ ஒரு வற்புறுத்தல் காரணமாகச் செய்யும்போது வாழ்க்கை சலிப்பாகி விடுகிறது.
ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் பிடிக்காததை செய்வதற்குதான் பழக்கப்பட்டு இருக்கிறோம். பிடிக்காத வேலை, படிப்பு, உறவு போன்றவற்றை ஏதோவோர் அழுத்தத்துக்குப் பயந்து தொடராமல்,
பிடித்த செயல்களைத் தேடிக் கண்டுபிடித்து அதில் நம் ஆற்றலைப் பயன்படுத்துவோம்.
அவ்வாறு செய்யும்போது வாழ்க்கை நமக்குப் பிடித்த வகையில் முழுமையாக மாறி விடும்.
பொதுவாகவே மற்றவர்கள் நம்மைப் பற்றித் தெரிவிக்கும் கருத்துகளை வைத்தும் நம்மைத் தீர்மானிக்கத் தொடங்குகிறோம்.
ஆனால்!, உண்மை என்னவென்றால், நமக்கு எது சிறந்தது என்று நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
அதனால் உங்கள் அகத்திலிருந்து வரும் குரலைக் கவனித்து, அது சொல்லும் பாதையில் நடக்கத் தொடங்குங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும் சிறந்ததாகவும் மாறிவிடும்.

No comments:

Post a Comment