Wednesday 7 September 2022

கற்பதும் கவனிப்பதும் .

 கற்பதும் கவனிப்பதும் .

கேள்விகளில் மிகச் சிறந்தது, எது என்றால், “நான் யார்” என்பதே. இந்தக் கேள்வி ஒருவனை ஆட்கொள்ளும் பொழுது, அவன் மனம் வெறுமையாக்கப்பட்டு, அவனது வாழ்க்கை என்னும் புத்தகத்தை கவனத்துடனும், பொறுமையுடனும் படிக்கிறான்.
மனித சமுதாயத்திலும், அதன் அமைப்பிலும் அடிப்படையான மாறுதல் கொண்டு வர ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கை புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
அவ்வாறு படிக்கத் தொடங்கும் போது, தான் இதுவரை உலகியல் சுற்றுச் சூழலோடு இயங்கி வந்ததை உற்று நோக்குகிறான்.
இனிமேல் உலகத்தோடு இயங்கப் போவதையும் கவனத்தோடு கவனிக்கிறான். கவனிக்கும் கலையுடன், கற்கும் கலையும் உருவாகிறது.
உங்களுடைய சுய சிந்தனை, ஏற்கனவே மற்றவர்களால் உங்களுக்குள் திணிக்கப்பட்டவைகளை மறுபரீசிலனை செய்யவோ அல்லது அழிக்கவோ செய்யும்.
இப்பொழுது உங்களை நீங்கள் உங்களுக்குள் தேட ஆரம்பித்து விடுவீர்கள். உங்களைப் பற்றி உணர்ந்து கொள்கிறீர்கள்.
உங்களுக்குப் புதிய பலமும், புதிய சக்தியும் தானாக உண்டாகி விடும். அப்பொழுது ஒரு புதிய மகிழ்ச்சி, ஆனந்தம் ஏற்படும். அது உங்களை வேறுவிதமான தன்மையில் இயங்க வைக்கும்.
ஏனெனில் உங்களிடம் உண்மை பிறந்து இருக்கிறது.
ஒரு ஆட்டு மந்தையில் ஒரு பெண் சிங்கம் நுழைந்தது. பயந்து போன ஆடுகள் சிதறி ஓடின.தாய்மை நிலையில் இருந்த அந்தப் பெண் சிங்கம் ஒரு குட்டியை பெற்றுப் போட்டு விட்டு இறந்து போனது.
தாயை இழந்த சிங்கக் குட்டிக்கு ஆட்டுக் கூட்டம் அடைக்கலம் தந்து பாலூட்டி வளர்த்தன.
ஆட்டுப் பாலைக் குடித்தும், புல் தின்றும், ஆடுகளோடு விளையாடி மே… மே… என்றும் கத்தியது.
வீரமும், கர்ஜனையும் மறந்து செம்மறி ஆடாகவே தன்னை எண்ணி வந்தது.
ஒரு நாள் ஒரு சிங்கம் ஆடுகளை வேட்டையாட வந்தது.எல்லா ஆடுகளும் பயந்து ஓடின.
கூடவே குட்டிச் சிங்கமும் பயந்து ஓடுவதைக் கண்டது. வேட்டைச் சிங்கம் வேட்டை ஆடுவதை விட்டு விட்டு தன்னைப் போலிருந்த குட்டி சிங்கத்தை மட்டும் துரத்திப் பிடித்தது.சிங்க ஆடு நடுங்கியது.
அதைப் பார்த்து சிங்கம் கேட்டது, ''நீ ஏன் என்னைக் கண்டு பயந்து ஓடுகிறாய், நீயும் என்னைப் போல வலிமையான என் இனம் அல்லவா?
சிங்க ஆடு மே.. மே… என்று கத்தியபடி பதில் சொன்னது,“நான் செம்மறி ஆடு தானே நான் எப்படி சிங்கமாவேன்” என்றது.
தான் ஒரு சிங்கம் என்பதை அதற்கு உணர்த்த அந்தக் காட்டில் இருந்த ஒரு குளத்தின் அருகே இழுத்துச் சென்றது பெரிய சிங்கம்.
இதோ பார் நீயும் சிங்கம், நானும் சிங்கம் தெரிகிறதா?” என்று கோபமாக கர்ஜித்துக் கொண்டே அதன் தலையைத் தண்ணீரில் தெரியும்படி கவிழ்த்துக் காட்டியது.
ஆமாம் நானும் சிங்கம் தான்” என்று தண்ணீரில் தன் நிழலைப் பார்த்த குட்டி சிங்கம் கூறியது.
ஆஹா! உனக்கு இப்போது தன்னம்பிக்கை வந்து விட்டது” என்று சிங்கம் பலமாக கர்ஜித்தது. அதைப் பார்த்த சிங்க ஆடும் கர்ஜித்தது.
அதன் புதிய கர்ஜனை காடு முழுவதும் எதிரொலித்தது.தான் ஒரு சிங்கம் தான் என்ற தன்னம்பிக்கை வந்ததால் அது செம்மறி ஆட்டுக் கூட்டத்தை விட்டுச் சுதந்திரமாகத்
சுற்றித் திரிந்தது.
மனிதர்கள் தங்கள் சக்தியைப் புரிந்து கொள்ளாத வரை செம்மறி ஆடுகளைப் போல நடந்து கொள்கிறார்கள்
புரிந்து கொண்டாலோ அப்போதே சிங்கத்தைப் போலவே வலிமை உடையவர்கள் ஆகிறார்கள்.
மனித மனம் அளப்பரிய சக்தி கொண்டது. ஒன்றை நினைத்தால் அதை நிச்சயம் அடையக் கூடிய சக்தியைத் தரவல்லது.
எழுந்திருங்கள்
துணிவோடு நில்லுங்கள். உங்களைச் சுற்றி பிணைக்கப்பட்டு உள்ள தடைகளை அறுத்து எறியுங்கள்.
உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.

No comments:

Post a Comment