Friday 19 August 2022

அடக்கத்தில் இருக்கும் சுகம் ஆணவத்தில் இல்லை.

 அடக்கத்தில் இருக்கும் சுகம்

ஆணவத்தில் இல்லை.
அடக்கம் அமரருள் உய்க்கும்... கவியரசர் கண்ணதாசன்....
ஒரு சபைக்கு நான் போயிருந்தேன். பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைத்த அரைகுறை படிப்பாளி ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.
அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளை கூட யாரும் திருத்தவில்லை. ஒவ்வொரு வரியையும் முடிக்கும் போது "எப்படி நான் சொல்வது?" என்று கேட்டுக் கொண்டே இருந்தார். நான் ஆத்திரம் தாங்காமல், "ஒரு குழந்தை எப்படி சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்" என்றேன். "தெளிவில்லாதவன், விவேகமற்றவன்" என்பதை நயமாகவும் நளினமாகவும் சொன்னேன்.
சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றி விடுவார்கள். என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில் அசிங்கமாகத் தாக்குவார்கள். நான் அடக்கத்தோடும், பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களை தாக்க மாட்டேன். சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.
முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை, ஆணவத்தின் மூலம் வெற்றியோ, லாபமோ கிடைப்பதில்லை. அடிதான் பலமாக விழுகிறது. தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி.
தான் மந்திரி ஆகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்.
தான் சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காக தினமும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள்.
இவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் அவமானத்தாலும், வெட்கத்தாலும் கூனி குறுகிப் போய் விடுகிறார்கள்.
"எதற்கும் தான் காரணம் அல்ல; ஏதோ ஒரு சக்தி தான் காரணம்" என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.
"மற்றவருக்கு என்ன தெரியும்" என்று நினைப்பவன் சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை. ஆணவத்தால் அழிந்து போன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு.
அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயல் காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து, வளைந்து எந்தக் காற்றிலும் தப்பி விடுகிறது.
"எல்லோருக்கும் நன்றாம் பணிதல்" என்றான் வள்ளுவன். "அடக்கம் அமரருள் உய்க்கும்" என்று பேசுகிறவர்கள் உண்டு. பெரியோர் வற்புறுத்தும் பணிவும், அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கி போவதற்கான படிக்கட்டுகளே!.
என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியது பற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன்.
"அந்த கால்கள் தேசத்துக்காக சத்தியாகிரகம் செய்யப்போன கால்கள். சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள். என்னுடைய கால்களுக்கு அந்த பாக்கியம் இல்லாததால், கைகளாவது அந்த பாக்கியத்தை பெறட்டுமே!.
சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னை புகழ்வார்கள். எனக்கு சர்வாங்கமும் ஒடுங்கிவிடும். "நாம் என்ன எழுதிவிட்டோம்? நாம் என்ன செய்து விட்டோம்? என்ற எண்ணமே தோன்றும். " இப்படி புகழ்கிறார்களே" என்று பயம் தோன்றும்.
ஆண்டவன், என் தலையில் ஆணவத்தை உட்கார வைத்து என்னை அவமானப்படுத்தியதில்லை.
அடக்கத்தில் இருக்கும் சுகம், ஆணவத்தில் இல்லை!
ஆணவத்தின் வெற்றி ஆரவாரங்களையும், அவற்றின் வீழ்ச்சியையும், புராணங்களிலும் இதிகாசங்களிலும் படியுங்கள்.
"கீதையில் கண்ணன் சொல்லும் தர்மங்களில் அடக்கமும் ஒன்று" என்பதையும் அறியுங்கள்.
குருட்டுத்தனமாக ஏதேனும் வெற்றியோ, பதிவியோ கிடைத்து விட்டால், அதை வைத்துக் கொண்டு ஞானிகளையும் பெரியவர்களையும் அவமதிக்காதீர்கள்.
அடங்கி வாழ்ந்தால் ஆயுள் காலம் முழுவதும் ஓங்கி வாழலாம் என்பதே உண்மை.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்...
ஆன்மீக மலரிலிருந்து....
நன்றி கவியரசு கண்ணதாசன் முகநூல்

No comments:

Post a Comment