Monday 22 August 2022

புளியம்பழமும் ஓடும் போல இருங்கள்.

 புளியம்பழமும் ஓடும் போல இருங்கள்.

நாளும் வளர்ந்து வரும் அறிவியல், மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றிவிட்டது. ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களை விட, அதனால் அழிந்து போனவர்கள்தான் அதிகம்.
ஒவ்வொரு செயலும் மனித வாழ்க்கையில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்பதில் எந்தத் தடையுமில்லை. அது ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போதுதான் அழிவுப்பாதை ஆரம்பமாகின்றது.
மன்னர் கிருட்டிண தேவராயருக்கு பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது. முதன்மை அரசவையோர்கள், பொதுமக்கள் என மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள்.
தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொதி மிகப் பெரிதாக இருந்ததால், அவையில் உள்ளவர்கள், ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொதியைப் பிரிக்குமாறு தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் பொதியைப் பிரித்தார், அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.அவையினர் பகடி செய்து சிரித்தனர்.
அரசர், “ராமா!, இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன” எனக் கேட்டார்...
அரசே!, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.
"அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்...!” என்றார்...
அவையினர் கரவோசை எழுப்பி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ”ராமா!, எனக்குச் சரியான புத்தி புகட்டினாய்". ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.
”புதையலும் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே என் பிறந்தநாள் விழாவை நிறுத்துங்கள்", இனி என் பிறந்த நாளன்று வறுமையில் வாடும் ஆதரவற்ற ஏழைகள், வயோதியர்களுக்கு மூன்று வேளை அன்னதானம் செய்யுங்கள்.
வீர விளையாட்டுக்களை நடத்துங்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னும், பொருளும் கொடுங்கள். தேவையின்றி பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என ஆணையிட்டார்.
ஆடம்பர மீதான மோகம் அழிவைத்தான் கொடுக்கும்,
தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் பின் ஒருநாள் அமைதி இழப்பார்கள்.
ஆடம்பர வாழ்க்கை வாழ்பவனின் செல்வம் எல்லாம் சூரிய ஒளியின்முன் மாயும் மூடு பனியைப்போல மறைந்து விடும்.
நமது தகுதிக்கு உட்பட்டு, எளிமையாக வாழ்ந்து விட்டால் மனநிறையுடன் வாழலாம்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளைத் துவங்க இறைவன் அருள் புரியட்டும்.
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்
நல்ல எண்ணங்களுடன்
இன்றைய நாளைத் தொடங்குவோம்.

No comments:

Post a Comment