Tuesday 16 August 2022

அக்காள் மடமும் தங்கச்சி மடமும்.

 அக்காள் மடமும் தங்கச்சி மடமும்.

*'நீதி' நெறி தவறாத சேதுபதி மன்னர்!!!*
பதினாறாம் நூற்றாண்டு காலம் அது!!!
இராமேசுவரத்தில்...
நான்கு பேர் அந்தப் பல்லக்கினைச் சுமந்தபடி சென்று கொண்டிருக்கிறார்கள்.
பல்லக்கிற்கு முன்னும் பின்னும் சில வீரர்கள் காவலுக்குச் செல்கிறார்கள்.
பல்லக்கில் *சிவகாமி நாச்சியார்.*
எதிரே சிலர் பல்லக்கை நோக்கிப் பதை பதைப்புடன் ஓடி வருகிறார்கள்.
பல்லக்கு நின்றது.
ஓடி வந்தவர்களுள் ஒருவர் பல்லக்கின் அருகில் சென்று கைகட்டிப் பணிவுடன் அந்தச் செய்தியைச் சொல்லுகிறார்.
செய்தியினைக் கேட்டு அதிர்ந்த சிவகாமி நாச்சியார் பல்லக்கை கீழே இறக்கச் சொல்லி பல்லக்கில் இருந்து வெளியே வருகிறார்.
கண்கள் கலங்க ஒரு நிமிடம் யோசித்தவர் வீரர்களை அழைத்துக் கட்டளை இடுகிறார்.
கட்டளையினை கேட்ட வீரர்கள் தயங்குகின்றனர்.
'ஏன் தயங்கி நிற்கிறீர்கள் உடனே நான் சொன்னதைச் செய்யுங்கள்...'
என வலியுறுத்த...
அருகில் இருந்த ஊருக்குள் புகுந்த வீரர்கள் விறகுகளைக் கொண்டு வந்து அடுக்குகின்றனர்.
விறகுகளின் மீது எண்ணெய் ஊற்றி நனைக்கின்றனர்.
பின் ஒரு சிறு நெருப்பை விறகுகளின் மீது உட்கார வைக்க...
தீ கொழுந்து விட்டு எழுந்து எரியத் தொடங்குகிறது.
சிவகாமி நாச்சியார் மெல்ல நடந்து...
தீயினுள் நுழைகிறார்.
நாச்சியாரைத் தன் அனைத்துக் கரங்களாலும் ஆசைதீர வாரி அணைத்த *தீ...*
மேலே மேலே எழும்பி விண்னைத் தொடுகிறது.
சில நிமிடங்களில் நாச்சியார் சாம்பலானார்.
சிவசாமி நாச்சியார் தீயினுள் புகுந்த இடத்திலிருந்து சிறு தொலைவில்...
வேரொரு பல்லக்கு வந்து கொண்டிருக்கிறது.
*ராஜலட்சுமி நாச்சியார்* பல்லக்கு அது.
முன்பு போலவே,
எதிரே சிலர் ஓடி வருகின்றனர்.
பல்லக்கு நிற்கிறது.
நபர்கள் செய்தியினை சொல்ல...
சிவகாமி நாச்சியார் போலவே இந்த நாச்சியாரும், அதே கட்டளைகளை இடுகிறார்.
மீண்டும் விறகுகள் அடுக்கப்படுகின்றன.
எண்ணெய் ஊற்றப்படுகிறது.
*தீ வைக்கப்படுகிறது...*😔
*ராஜலட்சுமி நாச்சியாரும் தீ புகுகிறார்.*😢
*சாம்பலாகிறார்.*😭
*ஏன் இந்த விபரீதம்?*
அதற்கு காரணம்...
*'விஜயரகுநாத சேதுபதி.'*
இரண்டு நாச்சியார்களின் தந்தை!
இராமநாதபுர மன்னர்.
1713 ஆம் ஆண்டு முதல் 1725ஆம் ஆண்டு வரை இவர் ஆட்சி செய்தார்.
ஒருசமயம்,
மந்திரிகள் சூழ அரசவையில் வீற்றிருக்கும் போது...
ஒரு முதியவர்...
அரசர் முன் வந்து பணிவோடு வணங்கி,
"மன்னா! நான் ஒரு துறவி...
வட நாட்டில் இருந்து வருகிறேன்...
காசிக்கு சென்று புனித நீராடி விட்டு...
இங்கு இராமேசுவரத் திருத்தலத்தில் நீராடி புனிதம் பெற வேண்டி வந்துள்ளேன்.
ஆனால்,
இங்கு கோவிலுக்கு படகினில் செல்ல... 'நான்கு அணா கட்டணம் கொடுத்தால் தான் அழைத்துச் செல்வேன்' என்கிறார்கள்.
துறவியிடம் ஏது காசு...
எனவே, தங்களின் உதவி நாடி வந்துள்ளேன்..."
துறவி பேசப் பேச மன்னரின் முகம் மாறுகிறது.
தொடர்ந்து,
துறவி, " என்னிடம் பொன், பொருள் ஏதுமில்லை...
நடந்தே பயணப்பட்ட நான் வழியில் இருக்கும் அன்ன சத்திரங்களில் கிடைக்கும் உணவை உண்டே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்."
என்றார்.
உடனே,
சிவந்த முகத்துடன் மன்னர்,
"என்ன மந்திரியாரே! என்ன சொல்கிறார் இவர்?
இவர் சொல்வது உண்மையா?"
*இராமேசுவரத்தில் கோவில் செல்ல...*
*இறைவனைத் தரிசிக்க அரசுப் படகுகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றல்லவா உத்தரவிட்டிருக்கிறேன்...*
இவரோ நான்கு அணா வசூலிக்கப்படுவதாகக் கூறுகிறாரே இது உண்மையா?"
அரண்மனையே ஒரு கணம் அதிர்ந்து போகிறது.
மந்திரி,
"ஆமாம் மன்னா. உண்மைதான்..."
மெல்ல பதில் உரைக்கிறார்
"என்ன சொல்கிறாய்?"
(அரசரின் கோபக்குரல் அரண்மனை எங்கும் எதிரொலிக்கிறது.)
மந்திரி,
" மன்னிக்கனும் மன்னா! இராமேசுவரத்தின் ஆளுநராக...
தங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் தங்களின் மருமகனார் தண்டபாணித் தேவர் அவர்களின் உத்தரவுப்படியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது...
இந்தத் தொகை கோயிலின் பராமரிப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது...
தங்களின் மருமகனாயிற்றே...
'தங்களின் அனுமதி பெற்றுத்தான் வசூலிக்கிறார்'
என்று எண்ணி இருந்துவிட்டோம்.
அரசரின் கண்கள் சிவக்கின்றன.
"வீரர்களே! உடனே சென்று தண்டபாணித்தேவரை கைது செய்து அழைத்து வாருங்கள்..."
வீரர்கள் பறக்கின்றனர்.
தண்டபாணித் தேவர், விஜய ரகுநாத சேதுபதியின் அக்காள் மகன்.
சேதுபதிக்குத் தன் அக்காள் மகன் மீது அளவுகடந்த பாசம்.
எப்படிப்பட்டப் பாசம் தெரியுமா?
சிவகாமி நாச்சியார், ராஜலட்சுமி நாச்சியார் என்னும் தன் இரு மகள்களையும் தண்டபாணித்தேவருக்கே திருமணம் செய்து வைக்கிற அளவிற்கு பாசம்.
ஆனால்...
*தவறு என்று வந்து விட்ட பிறகு மகனாவது, மாப்பிள்ளையாவது...*
அடுத்த சில மணி நேரங்களில் தண்டபாணித் தேவர், மன்னர் முன் நிறுத்தப்படுகிறார்.
"எனது உத்தரவிற்கு மாற்றாக படகில் பயணிப்பதற்குக் கட்டணம் வசூலித்தது உண்மையா?"
"ஆம், உண்மை."
"இது மன்னிக்க முடியாத குற்றம் தெரியுமா?
தேசத் துரோகமே செய்திருந்தாலும் நாடு கடத்தித் தங்களை மன்னித்திருப்பேன்.
ஆனால்...
*தாங்கள் சிவத் துரோகம் செய்துவிட்டீர்கள்.*
இதற்கு மன்னிப்பே கிடையாது.
வீரர்களே! இவரை இழுத்துச் சென்று, சிரச்சேதம் செய்யுங்கள்..."
உத்திரவிட்டு விட்டு...
தனது மனக்குமுறலை வெளிக்காட்டாமல்...
தலையை குனிந்து, எழுந்து விறுவிறுவென சென்று விட்டார்.
மாமனாரின் உத்தரவின்பேரில், மருமகனாரின் தலை துண்டிக்கப்பட்டது.
அங்கே,
அரசரின் கட்டளையின்படி...
தங்கள் கணவரைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் என்பதை அறிந்த மறு நொடியே...
சிவகாமி நாச்சியாருக்கும், ராஜலட்சுமி நாச்சியாருக்கும் பயம் தொற்றிக் கொண்டது.
'தங்கள் கணவருக்கு என்ன ஆகுமோ?'
என்ற பதட்டத்துடன் இருவரும் பல்லக்கு ஏறி இராமநாதபுரம் புறப்பட்டனர்.
'அவருக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது' என்னும் ஏக்கத்துடன் வந்து கொண்டிருக்கும் போது தான்...
பாதி வழிவிலேயே செய்தி வந்துவிட்டது.
'கணவர் தண்டிக்கப்பட்டு விட்டார்.!
சிரம் துண்டிக்கப்பட்டது!'
செய்தி அறிந்த பிறகு தான் அவ்விடத்திலேயே இருவரும்..
தீயிடைப் புகுந்து வெந்து மாய்ந்தனர்.
அக்காள் சிவகாமி நாச்சியார் அணலிடைப் புகுந்து,
தீயில் கரைந்து சாம்பலான இடம்...
இன்று,
*அக்காள் மடம்.* என்றும்
தங்கச்சி ராஜலட்சுமி நாச்சியார் தீயில் கலந்து காற்றில் கரைந்து போன இடம்...
இன்று,
*தங்கச்சி மடம்.* என்றும் அழைக்கப்படுகிறது.
இராமநாத புரத்தை கடந்து...
கடல்மேல் பாம்பன் பாலத்தில் பயணித்து...
தரையிறங்கி, இராமேசுவரம் செல்லும் வழியில்...
இன்றும்,
அக்காள் மடமும்,
தங்கச்சி மடமும்,
ஒரு பெருந்துயரின் சாட்சியாய்...
*நீதி வழுவா! நெறி முறையின் மாட்சியாய்...* நிமிர்ந்து நிற்பதை காணலாம்.
அடுத்தமுறை நீங்கள் இராமேசுவரம் செல்லும் பொழுது...
அக்காள் மடத்திற்கும்,
தங்கச்சி மடத்திற்கும் சென்று அங்கே கொஞ்சம் நடந்து பாருங்கள்.
அக்காளும், தங்கச்சியும் விட்ட கடைசி மூச்சுக் காற்றை நீங்களும் ஒருவேளை சுவாசிக்கலாம்.
பெருந்தீயில் வெந்து காற்றில் கலந்த இவர்களின் சாம்பல், தங்களுக்கு மேல் தவழ்ந்து கொண்டிருக்கலாம்.
இது தான் நமது உண்மையான வரலாறு.
இது போன்ற நம் *தமிழர்கள் வரலாற்றை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.*
மேலும்,
மற்றவர்களுக்கும் நாம் அதிகமா பகிர்ந்தால் மட்டுமே நம் வரலாறு அனைவரிடமும் சென்றடையும்.

No comments:

Post a Comment