Monday 25 January 2021

உண்மை உங்களை உயர்த்தும் .

 உண்மை உங்களை உயர்த்தும் .

சில கண்டுபிடிப்புகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, தொலைபேசி, மின்சாரம், விமானம் போன்றவற்றைக் கூறலாம்...
ஆனால்!, வேறுசில கண்டுபிடிப்புகள் மக்களுக்கு மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, சிகரெட், துப்பாக்கி, கண்ணிவெடி, அணுகுண்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம்...
ஆனால்!, இவை எல்லாவற்றையும்விட மனிதர்களின் வாழ்க்கைக்கு உலை வைக்கிற மற்றொன்றும் இருக்கிறது...
அது ரொம்ப காலமாகவே இருந்து வருகிறது! அதுதான், பொய்! உண்மை அல்ல என்று தெரிந்து இருந்தும் ஒருவரை ஏமாற்றுவதற்காக கூறப்படுகிற தகவல்தான் பொய்...!
மதத் தலைவர்கள் பொய்களைக் கூறும்போது, இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல்வாதிகளும் பொய் சொல்லியிருக்கிறார்கள்.சொல்லி வருகிறார்கள்...
பொய் சொல்வதை இயல்பானதாகவும் வழக்கமானதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். தங்களைப் பாதுகாப்பதற்காகவும், தவறுகளை அல்லது குற்றங்களை மூடி மறைப்பதற்காகவும் சிலர் அடிக்கடி பொய் சொல்கிறார்கள்...
இப்படிப் பொய் சொல்வதால் கடைசியில் என்ன ஆகிறது...?!
ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை போய்விடுகிறது. அத்தோடு, உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது...
ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை எனத் தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை எவரும் உண்மை என ஏற்க மாட்டார்கள்...
*ஆம் நண்பர்களே...!*
எப்போதும் உண்மையே பேசுங்கள், .நீங்கள் பொய் பேசினால் அந்தப் பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.
அதேவேளை.. நீங்கள் உண்மை பேசினால், அந்த உண்மை உங்களை காப்பாற்றும்.
ஒரு பொய்யை மறைக்க, பல பொய்கள் சொல்ல வேண்டும். ஒரு உண்மையைக் கூற அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை.

No comments:

Post a Comment