Friday 26 May 2023

மனம் தந்திரசாலி.

 மனம் தந்திரசாலி.

இமயமலையின் அடிவாரம். நீண்ட பயணத்திற்குப் பிறகு பஸ்ஸிலிருந்து அந்த இளைஞன் இறங்கினான். அவனுடைய இரண்டு துணி மூட்டைகளைச் சுமந்துகொண்டு மலையேற, காத்திருந்த கழுதைகளில் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டான்.
"எங்கே போக வேண்டும் சாஹேப்?”- கழுதையை வழி நடத்துபவன்
கேட்டான். "ஏதாவதொரு நல்ல சாமியார் ஆசிரமத்திற்குப் போ." "எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள்?
"நாட்களா? இனி என் வாழ்க்கையே இங்கேதான். என் மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா, பிஸினஸ் எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்துவிட்டேன். இதோ என் கழுத்தில் இருக்கிறதே தங்கச் சங்கிலி... இதைக்கூட உனக்குக் கொடுத்து விடப் போகிறேன்.'
கழுதைக்காரன் வியந்து நின்றான். "இந்தச் சின்ன வயதில் உங்களுக்கு எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று?"
இளைஞன் முகத்தில் பெருமிதம் வழிந்தது. "எங்கள் ஊருக்கு வந்திருந்த குரு ஒருவர் சொன்னது என்னை ஆழமாகத் தொட்டுவிட்டது. ஆசைகள் தான் துன்பத்துக்கெல்லாம் காரணமாம். அதுதான் எல்லா ஆசைகளையும் உதறிவிட் டு வந்துவிட்டேன்." "எல்லாவற்றையும் உதறிவிட்டு, இந்த மூட்டைகளில் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள், சாஹேப்?"
"இங்கே குளிர் அதிகம் என்று சொன்னார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் கடைகளும் கிடையாதாமே. அதனால், இந்த மூட்டைகளில் எனக்கு வேண்டிய கம்பளிகளை எடுத்து வந்திருக்கிறேன்."
கம்பளியைக்கூட உதற முடியாமல் வாழ்க்கையையே உதறியதாகச் சொல்லும் அந்த இளைஞனைப் போல, ஆசையைத் துறந்ததாகப் பலர் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.
ஆசை இல்லாமல் இந்தப் பிரபஞ்சம் இல்லை. ஆசை இல்லாமல் இந்த உடல் இருக்காது. உயிர் இருக்காது. ஆசைப்படக் கூடாது என்று இந்தப் பிரபஞ்சம் ஒருநாளும் உங்களுக்குச் சொல்லித் தரவில்லை.
ஆசையைத் துறக்கத் தீர்மானித்து விட்டேன் என்று உங்கள் மனம் போலித்தனமாக துறவு பேசும். மனம் தந்திரசாலி. எதையோ சொல்லி உங்களை நம்பவைத்து ஏமாற்றும். அந்த சூட்சுமம் அதற்குத் தெரியும். ஆனால் உடம்பு.
காற்றுப் புகமுடியாதபடி உங்கள் வாயையும், மூக்கையும் இறுகப் பொத்திக் கொண்டு வேடிக்கை பாருங்கள். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் வேண்டுமானால் உடம்பு பொறுத்துக்கொள்ளும். அப்புறம், உயிர் வாழவேண்டும் என்று உங்கள் உடம்புக்குள் பீறிட்டு எழும் ஆசை, உங்கள் கையைப் பிடுங்கிப்போடும். விட்டுப் போனதற்கும் சேர்த்து அள்ளி அள்ளி ஆக்ஸிஜனைக் குடிக்கும்.
ஆசை இல்லை என்று உங்கள் மனம் சொன்ன தத்துவங்கள் எல்லாம் உடம்பிடம் எடுபடாது. ஏனென்றால், அதற்குப் பொய்சொல்லி ஏமாற்றத் தெரியாது.
உடம்பு என்று மொத்தமாகக் கூடச் சொல்ல வேண்டாம். அதில் இருக்கும் ஒவ்வொரு 'செல்'லும் ஆசையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. விருந்தாளியாக உள்ளே ஒரு நோய்க் கிருமி நுழைந்து பார்க்கட்டுமே... உடனே ஒவ்வொரு 'செல்'லும் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு கடுமையான போருக்குக் கிளம்பிவிடும். எதற்காக?
பிரபஞ்சம் அதற்கு வாழும் ஆசையைக் கொடுத்திருக்கிறது.
அதனால்தான் சொல்கிறேன், ஆசைப்படுங்கள். மிகப்பெரிதாக ஆசைப்படுங்கள். அந்த தைரியம்கூட இல்லாமல், அற்பமாக ஆசையைச் சுருக்கிக் கொண்டீர்களேயானால், வாழ்க்கையில் வேறு எதைப் பெரிதாக நீங்கள் சாதித்து விடப் போகிறீர்கள்.

No comments:

Post a Comment