Wednesday 17 May 2023

துயரங்களும் துன்பங்களும்.

 துயரங்களும் துன்பங்களும்.

*“ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்குச் சமம்.”*
இந்த வரிகளை வாசித்தபோது,
மனதுக்குள் ஏனோ
மறைந்து போன நடிகர் நாகேஷும் , இயக்குனர் பாலச்சந்தரும் வந்து போனார்கள்.
நாகேஷ் தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லையாம்.
பாலச்சந்தர் கேட்டாராம்.
'நாகேஷ்... இன்னும் நீ உன் குழந்தையைப் போய் பார்க்கவில்லையா..?”
“இல்லை” என்று மெல்லிய குரலில் சொன்னாராம் நாகேஷ்.
“ஏன்..?”
சில நொடிகள் அமைதிக்குப் பின், தழுதழுத்த குரலில் நாகேஷ் சொன்னாராம் :
“கொஞ்சம் என் முகத்தைப் பாருங்கள். முழுவதும் அம்மைத் தழும்புகள்... இந்த முகத்தோடு போய் நான் என் குழந்தையைப் பார்த்தால்...
அந்த சின்னஞ்சிறு குழந்தை பயந்து விடாதா ? அதனாலேதான் நான் போய் என் குழந்தையைப் பார்க்க விரும்பவில்லை.”
கண்ணீர் ததும்பும் கண்களோடு நாகேஷ் இப்படிச் சொல்லவும்
கலங்கிப் போய் விட்டாராம் பாலச்சந்தர் .
கொஞ்ச நேரத்துக்குப் பின், நண்பன் நாகேஷை சமாதானம் செய்தாராம்.
“நாகேஷ்...
உனக்கு உன் நடிப்புத்தான் அழகு...
கவலைப்படாதே !
முதலில் போய் உன் குழந்தையை பார்த்து தூக்கிக் கொஞ்சி விட்டு,
அப்புறம் ஷூட்டிங்குக்கு வா...” என்று உற்சாகம் கொடுத்து அனுப்பி வைத்தாராம் பாலச்சந்தர்.
*🎤 (சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திரைப்பட விழாவில், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் சொன்ன தகவல் இது)*
இவ்வளவு துன்பங்களையும் , துயரங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டுதான்,
நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ்.
*“சிரிப்பவர்கள் எல்லோரும் கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை;*
*கவலையை மறக்க கற்று கொண்டவர்கள்"..!!*

No comments:

Post a Comment