Friday 12 March 2021

நேர்மையே முன்னேற்றத்திற்கு வழி

 நேர்மையே முன்னேற்றத்திற்கு வழி

இன்று ஒழுக்கம், நேர்மை இவற்றைக் காணுவது என்பது அரிதாகவே உள்ளது. ஒழுக்கம், நேர்மை உடையவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். காரணம் நேர்மையானவர்கள் சிலராகி, நேர்மையற்றவர்கள் பலராகி விட்டதுதான்.
பெற்றோர்களிடம் நேர்மை இருந்தால் தான் பிள்ளைகளிடமும் நேர்மை இருக்கும். முன்னேற வேண்டும் என்ற விருப்பம் உடையவர் முதலில் நேர்மையானவராக இருக்க வேண்டும். பிறர் பொருளின் மீது ஆசை கொள்ளாதவராக இருக்க வேண்டும். நேர்மையற்றவர்களின் உள்ளம் எதிர்காலத்தையே அழித்து விடும்.
பணம் இல்லாதவனுக்கு பணம் சம்பாதிப்பதுதான் வெற்றி. ஆனால் பணம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் நோயால் அவதிபடுபவருக்கு அதிலிருந்து மீண்டு, ஆரோக்கியமாக வாழ்வதுதான் வெற்றி. இப்படி ஒவ்வொருவருக்கும் வெற்றி என்பது அவர்களிடம் இல்லாத ஒன்றை தேடி ஓடுவதே என்றாகி விடுகிறது. ஆனால் எல்லோருக்கும் பொதுவான ஒரு வெற்றி இருக்கிறது.
அது வாழ்க்கையில் நிறைவாக வாழ்வது, அடுத்தவருக்கு வழிகாட்டியாய் இருப்பது, பிற உயிர்களை மதிப்பது அவற்றுக்கு துன்பம் தராமல் இருப்பது, ஆக மொத்தம் சந்தோஷமாக வாழ்வதற்கும், வெற்றிகரமான வாழ்க்கை இருப்பதற்கும் நேர்மை அவசியம். நேர்மையாக வாழ நம்மை தயார்படுத்தி கொள்வது அவசியம். உடலும், மனதும் தூய்மையாக இருப்பின் நாம் நினைக்கின்ற எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வலிமையும், வழியும் தானாக பிறக்கும்.
நம் எண்ணங்களுக்கு நம்மைவிட அதிக பலம் இருக்கிறது. இது ஏதோ ஊக்கப்படுத்தும் தத்துவம் என்று நினைக்காதீர்கள், இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. நேர்மையாக வாழ்வதில் சிரமம் இருக்கதான் செய்யும். இருப்பினும் மனதில் துணிவுடன் இருந்தால் நேர்மையாக வாழ்ந்து முன்னேற்றத்திற்கு வழி காணலாம்.

No comments:

Post a Comment