Monday 28 December 2020

கொடுப்பினை (ஆகூழ்) கொள்ளாதீர்கள்.

 கொடுப்பினை (ஆகூழ்) கொள்ளாதீர்கள்.

ஆகூழ், அதாவது 'அதிர்ஷ்டம்' என்பதற்கு என்ன பொருள் தெரியுமா...?, அதாவது திர்ஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பார்வை என்பது பொருள்...
அதிர்ஷ்டம் என்றால் பார்வையின்மை, குருட்டுத்தனம் என்று பொருள்...
ஆகூழ் என்ற சொல்லின் பொருள் இப்படி இருக்க, பலரும் அதனைப் பயன்படுத்தித் தங்களை சோம்பேறியாக்கி வருகிறார்கள்…
அறிவினாலும், அறிவியலாலும் ஏற்றுக் கொள்ள முடியாததே மூடநம்பிக்கை ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்...
ஆனால்!, அதுவே அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அது மூடநம்பிக்கையே...!
‘’அதிர்ஷ்டம்’’ என்னும் பெயரில் மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகள் பெருமளவு காரணம் காட்டியே உழைக்காமல் சோம்பேறிகளாக நிறையப் பேர் உள்ளனர்...
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான். ஒரு நாள்!, தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது.
அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை...
அதனால்,
'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகி விடுவேன்’ என்று நினைத்தான்...
அந்தக் காசைத் தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். அதைத் தன் மனைவியிடம் கொடுத்து இந்த சட்டைப் பையை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினான்...
அன்று, அவனுக்கு மற்ற நாளை விட அதிக வருமானம் கிடைத்தது...
'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான்.
அன்றிலிருந்து அவன் நாளும் மனைவியிடம் அந்த சட்டைப் பை வாங்கி காசை தொட்டுப் பார்த்துக் கொள்வான். வெளியே எடுக்க மாட்டான்...
சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.பல வருடங்களுக்குப் பின்,ஒரு நாள் தன் மனைவியிடம்,
''அந்தக் காசைப் பார்க்க வேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!, அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று...?’ என்று குழப்பத்துடன் பார்த்தான்...
அதற்கு, அவன் மனைவி கூறினாள்,
''என்னை மன்னியுங்கள். உங்கள் சட்டை தூசியாக இருக்கிறதே!, என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்து விட்டது. எவ்வளவோ நான் தேடியும் கிடைக்கவில்லை. அதனால் நான் தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்...
''இது எப்போது நடந்தது...?'' என்று கேட்டான்...
''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள்...
அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் தான் எனக்கு வெற்றியை ஈட்டித் தந்தது, அந்த நாணயத்தால் அல்ல, என நினைத்தான். முன்பை விட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...
அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்.உங்களை நம்புங்கள்...!
விடா முயற்சியும், தன் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்...
நம் எல்லோரிடமும் தலைமைக் குணம் உண்டு. பொருளற்ற பயமும், அவநம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் தான், நம்மை அடிமைகளாய் வைத்திருக்கிறது...
ஆம் நண்பர்களே...!
தயவுசெய்து உங்களது திறமையையும், உழைப்பையும் நம்புங்கள். அதைவிட அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்...!
அந்த மூட நம்பிக்கை உங்களை எதிர்மறை குணம் உள்ளவராக மாற்றி விடும். நல்ல வாய்ப்புகளை நழுவ விடாமல் முழுமனதோடு உழைப்பவர்களையே வெற்றி தழுவும்...!!
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் உழைப்பை மட்டுமே நம்புங்கள், ''அதிர்ஷ்டத்தை'' நம்பி நாட்களை வீணடிக்க வேண்டாம், அச்சத்தைப் போக்குங்கள். ஆனந்தமாய் வாழுங்கள்.

No comments:

Post a Comment