Friday 25 December 2020

தடைகளை வெல்வது எப்படி . . .

 தடைகளை வெல்வது எப்படி . . .

இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப்படுகிறவர்கள் அநேகம்.
இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது தான்.
நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வது உண்டு..
அதாவது, யார் ஒருவர் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறாரோ, அவரே தனக்குத் தானே நண்பராகிறார்.
யார் ஒருவர் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறாரோ அவர் அவர்க்கே எதிரியாகிறார் என்று அர்த்தம்.,
பெரும்பாலான நிகழ்வுகள் ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்து இருக்கிறது என்பது புரியும்.
அது போன்று தான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம்.
செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது.
உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும்.
ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும்
இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்..
தடைகளை வெல்வது எப்படிங்க? என்று நீங்கள் கேட்கலாம்.
இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்து விட்டு திடீரென்று நின்று விட்டது.
மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.
பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது.எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.
துன்பம் ஏற்பட்டால்,
அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
ஆம்., நண்பர்களே ..,
ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை
நமக்கு இருந்தால் கூடப் போதும். எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய் விடும் .
எத்தனைத் தடைகள் குறுக்கிட்டாலும் , உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
தன்னம்பிக்க் கொள்வோம் ..! தடைகளைக் கடந்து வெற்றியை சுவைப்போம்.

No comments:

Post a Comment