Friday 25 September 2020

ஆசை இருக்கலாம், பேராசை கூடாது.

 ஆசை இருக்கலாம், பேராசை கூடாது.

மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் சிற்சில ஆசைகள் இருக்கும். ஆசைகள் வேறுபட்டு காணப்படும். ஒருவருக்கு மகிழுந்து வாங்கப் பிடிக்கும், இன்னொருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கப் பிடிக்கும்...
நமது ஆசை ஒன்று நிறைவேறி விட்டால், மனம் இன்னொரு ஆசைக்கு ஏங்கும். அதுதான் மனிதனது இயல்பு. ஆசைகள் இருக்கத் தான் வேண்டும். அதுவே நமக்கு இயலாத, நடக்காதவற்றுக்காக ஆசைப்படக் கூடாது...
அவன் பெரிய வீடு கட்டுகிறான். அவனைப் போல நானும் கட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால், அது நம்மால் முடியுமா...? என சற்று ஆலோசிக்க வேண்டும்...
அவனிடம் கோடி,கோடியாக பணம் இருக்கிறது செலவழிக்கிறான். நம்மால் முடியுமா...?
நமக்கு ஏற்ப, நமது தகுதிக்கு ஏற்ற, இயல்வனவற்றிற்கு ஆசைப்படலாம். நமது விரலுக்கு ஏற்ற வீக்கம். அதுபோலத் தான் நாமும் வாழப் பழக வேண்டும்...
பெண்கள் ஆசைப்படுவது!, கூடுதலாக நகை, உடைகள் வாங்கும் செயலில் தான். அது பேராசையாக மாறுகிறது...
கட்டிய வீட்டிலும், உடுத்தும் உடைகளிலும், வாழ்கின்ற வாழ்விலும் சரி, இருப்பதை வைத்து நாம் நிறைவடைவதில்லை. இல்லாத ஒன்றிற்காக ஆசைப்படுகிறோம். பேராசைப்படுகிறோம்...
மற்றவர்களிடம் இருக்கும், அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் மீது மனம் ஆசைப்படுகிறது. ஏனையோரிடம் நாம் நம்மை ஒப்பிடுகிறோம். அவர்களது ஆடம்பரமான வாழ்க்கை நம்மையும் அதில் ஈடுபட வைக்கிறது...
நாம் எப்போதுமே நமக்கு மேல் உள்ளவர்களுடன் ஒப்பிடுவதை விட்டு விட்டு, நமக்குக் கீழே இருப்பவரைக் கண்டு நிறைவு கொள்ள வேண்டும்..
ஆம்!, ஆசை நல்லதா...? கெட்டதா...?
அளவான ஆசை அனைத்தும் நல்லதே. நம்மால் நம் தகுதிக்கு ( உடல், மனம், பணம் ) உட்பட்ட ஆசை நல்லது...
அளவிற்கு அதிகமான, எண்ணற்ற ஆசைகள், நம் தகுதிக்கு மேற்பட்ட ஆசை அனைத்துமே நம் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிப்பவை. இவை அனைத்தும் நம் அமைதியினைக் கெடுப்பவை...
ஆம் நண்பர்களே...!
எந்த ஒன்றின்மீது ஆசை வருகிறதோ, அந்தப் பொருளின்றி, வாழமுடியாதா...? என்று எண்ணினால் ஆசைப்படுபவை வேண்டாம் என்றே அடிமனம் கூறும்...!
எவ்வளவு பொருள்களிலிருந்து விலகுகிறோமோ அவ்வளவு துன்பம் குறையும்...!!
ஆசை இல்லாத உயிர்கள் இல்லை, அதிக ஆசை உள்ள உயிர்கள் நிம்மதியாக வாழ்வதும் இல்லை, எனவே நமக்கு ஆசை இருக்க வேண்டும். அதுவே பேராசையாக இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment