Monday 28 September 2020

சந்தேகம்(அயிர்ப்பு ) கொள்ளல் அறிவிற் கேடு.

 சந்தேகம்(அயிர்ப்பு ) கொள்ளல் அறிவிற் கேடு.

அயிர்ப்பு என்னும் கொடிய நோய்க்கு உலகிலேயே மருந்து கிடையாது, இந்த அயிர்ப்பு நோய் எவ்வித கிருமிகளும் இல்லமாலே ஒரு மனிதனுக்குப் பிறவியிலோ அல்லது தருணச் சூழ்நிலையிலோ பரவக் கூடிய மிகப் பெரிய கொரானா போன்ற உயிர்கொல்லி... (அயிர்ப்பு- சந்தேகம், தருணம்- சந்தர்ப்பம்)
இந்த அயிர்ப்பு, ஒவ்வொரு மனிதனையும் மரணக் குழி வரை அழைத்துச் சென்ற உண்மை நிகழ்வுகளும் நிறைய உண்டு. நமது அன்றாட வாழ்விலும் கண்கூடாகக் காண்கிறோம்...
அயிர்ப்பினால் வாழ்வை தொலைத்தவர்கள் தான் எத்தனை எத்தனை...!!
அயிர்ப்பினால் துண்டாடப்பட்ட நட்புகள் தான் எத்தனை எத்தனை....?!
அயிர்ப்பினால் பிரிந்து விட்ட இணையர்கள் தான் எத்தனை எத்தனை...!?
அயிர்ப்பினால் உடைந்த குடும்பங்கள் தான் எத்தனை எத்தனை...??
இந்த அயிர்ப்பின் உண்மைத் தன்மையை உரசிப் பார்த்தால் பெரும்பாலும் எல்லாம் வெறும் கணிப்புகளாகவே இருந்திருக்கும். எதுவும் உண்மையாக இருந்திருக்காது...
எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்து கொண்டு அயிற்பு கொள்வது வளமான செயல்...
ஆனால்!, நம்மில் பலர் தொடர்பில்லாமலே வீணாக அயிர்த்து வாழ்வைத் தொலைத்தவர்கள் அதிகம். இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிக் கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு...
ஒருவருக்கு வீண் அயிர்ப்பு வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்...
ஆம் நண்பர்களே...!
நாம் வாழ்வதற்காகவே இங்கு வந்திருக்கின்றோம் என்பதை உணருங்கள், நம்பிக்கையோடு இனிதே வாழ்வைத் தொடங்குங்கள்...!
தேவையற்று மற்றவர்கள் மீது ''வீண் அயிர்ப்பு" கொள்வதை வைத்து உங்களின் வாழ்க்கையில் அல்லற்பட வேண்டாம்...
நமது அய்யன் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்...!
'தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.'' (குறள்:510) - என்று
குறள் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும் என்கிறார்.

No comments:

Post a Comment