வாழ்க்கையின் அருமை
எப்போது தெரியும்
ஒரு மகா கருமியின் கதை இது. தனது வாழ்நாள் முழுவதும் பணம் சேர்ப்பதிலேயே அந்தக்கருமி தீவிரமாக இருந்தான். இதற்காக அவன் நன்றாக சாப்பிடாமல், நல்ல ஆடைகள் அணியாமல், எந்த இன்பத்தையும் அனுபவிக்காமல் கஞ்சத்தனமாக இருந்தான். இப்படியாக அவன் தனது வாழ்நாளில் ஐந்து கோடி ரூபாய் சேர்த்து விட்டான். பின்னர் அந்த பணத்தைக்கொண்டு தனது வாழ்நாள் முழுவதும் சுகமாக வாழ நினைத்திருந்தான்.
அந்த நேரத்தில் அவனது உயிரை பறிக்க எமன் வந்தான். எமனைக்கண்டதும் அந்தக்கருமி அலறினான். “ஐயா, இத்தனை நாளும் என் வாழ்க்கையை நான் அனுபவிக்கவில்லை. இப்போது அதை அனுபவிக்க நினைத்தேன். அதற்குள் என்னை அழைத்துப்போக வந்துவிட்டீர்களே. *எனக்கு சில மாதங்கள் அவகாசம் கொடுங்கள்'* என்று கெஞ்சினான்.
ஆனால் எமன் மறுத்துவிட்டார். 'ஐயா, சில மாதங்கள் அவகாசம் தராவிட்டாலும் பரவாயில்லை. *3 நாட்கள் உயிர்பிச்சை தாருங்கள்*. அதற்கு பதிலாக எனது சொத்தில் பாதியை தருகிறேன்' என்றான் கஞ்சன்.
அதற்கும் எமன் செவிசாய்க்கவில்லை. வேறுவழியின்றி, ‘ஐயா, ஒரு நாளாவது வாழ அனுமதியுங்கள். அதற்குள் நான் முடிந்த அளவு வாழ்க்கையை அனுபவித்துக்கொள்கிறேன். இதற்கு பதிலாக என் வாழ்நாள் முழுவதும் நான் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் தருகிறேன்' என்றான் கஞ்சன்.
எமன் கொஞ்சம் கூட அசைந்துகொடுக்கவில்லை. இனிஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் எமனிடம், மகரயாழ் 'ஐயா எனக்கு *ஒருசில வினாடிகளாவது உயிர்ப்பிச்சை கொடுங்கள்.* அதற்குள் சிலவற்றை எழுத விரும்புகிறேன்' என்றான். மனம் இரங்கிய எமன் சம்மதித்தான். அந்தக்கருமி அவசரஅவசரமாக காகிதத்தில் எழுதத் தொடங்கினான்.
கருமி எழுதியது: ‘இந்தக்கடிதத்தை யார் படிக்க நேர்தாலும் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இது தான். *வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லாதது. அது எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது.* எனவே உங்கள் வாழ்க்கையை பணம் தேடுவதில் மட்டும் செலவழிக்க வேண்டாம். எனவே *வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.* என்னிடம் இருந்த ஐந்து கோடி ரூபாயால், என்னால் ஒரு வினாடி நேரத்தைக்கூட வாங்க முடியவில்லை.'
மரணம் தவிர்க்க முடியாதது. எனவே வாழ்நாள்
முழுவதும் பணத்தை தேடி ஓடாமல், இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழ முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment