Friday 16 October 2020

தெரிந்ததும், தெரியாததும்

 தெரிந்ததும், தெரியாததும்

நம்மில் சிலருக்குத் தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை...
தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அருவருப்பானதாம், இழிவாம், தன்மானத் தாழ்வாம், குழப்பமாம், மானக்கேடாம்...!
ஆனால்!, இப்படி இல்லவே இல்லை. தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவது தான் அறிவு என்கிறார் சீன ஞானி கன்பூசியஸ்...
எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாகக் கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்...
அறியாமை, வெட்கப்பட வேண்டியதே அல்ல; அதை ஒப்புக் கொள்ளாதற்குத் தான் வெட்கப்பட வேண்டும்...!
மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு வடக்காக ஓடுகிறது கொங்கண் புகைவண்டிப் பாதை. இந்த புகைவண்டிப் பாதையில் பயணிப்போர், மேற்குபுற சாளரத்தினோரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாக காணலாம்...(சாளரம்- ஜன்னல்)
கிழக்கு பக்க சாளரத்தினோரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காணமுடியும்...!
மறுபுறம் பார்க்கத் தவற விட்ட இந்தப் புகைவண்டிப் பயணிகளைக் குறை கூறவியலுமா...?
இப்படித் தான், நம் அறியாமைகளும்!, நாம் பயணிக்கின்ற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்குத் தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா...?
கடற்கரைப் பகுதியைக் கண்டவர்களும், மலைத் தொடர்ச்சிகளைக் கண்டவர்களும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படித் தவறு இல்லையோ...!,
அதேபோல, நாம் அறியாத மறு பக்கங்களை பிறர் கூறுகிற பொழுது, தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமலும், எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது என்று நடிக்காமல்,
'கூறுங்கள்'...!, எனக்கு நீங்கள் கூறும் நிகழ்வு புதியதாக இருக்கிறது என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது; இதுதான் அறிவுக் கூர்மையும் கூட...!
பல நாட்கள் கழித்து இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள், ஒருவர் தமிழ்நாட்டில் இருப்பவர். இன்னொருவர் வெளிநாட்டில் வசிப்பவர்...
அவர்கள் உரையாடிக் கொண்டு இருந்த போது வெளிநாட்டு நண்பர் திடீரென, "புராக்காஸ்டினேஷன் (procrastination)" என்று ஒரு சொல்லைக் கூறினார்...
அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்
(PROCRASTINATION)னு ஒரு வார்த்தை பேசும் போது கூறினீர்களே ; அதுக்கு என்ன பொருள்...?' என்று கேட்டார் நம்மவர்...
அட!, இது கூடத் தெரியாதா. உனக்கு..' என்று இழிநிலைப் புன்னகை சிந்தினார்...(இழிநிலை-இளக்காரம்)
அதற்கு நம்மவர் எனக்குத் தெரியாது என்றார்..நான் படித்ததெல்லாம் தமிழ் வழிக் கல்வியில், அதில் எதுவும் தெரியவில்லை எனில் தான் தவறு. .
'என்றார் நம்மவர்...
புன்னகை மாறாமல், மன்னிக்க வேண்டும் நண்பா!.,என்று இறங்கி வந்து ,
'புராக்காஸ்டினேஷன் ( PROCRASTINATION)னா.. தள்ளிப் போடுவது, தாமதப்படுத்துவது என்று பொருள் என்றார் அந்த வெளிநாட்டு நண்பர்...
ஆம் நண்பர்களே...!
பொதுவாக மேலைநாட்டவர்கள் தெரியாததைத் தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை...!
எல்லாம் தெரிந்த மேதாவி என்று தங்களைக் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை...!!
அறிவுத் தேடலில் உள்ளவர்கள், இத்தவறை செய்வதே இல்லை...!!!
இந்த உலகில் எவ்வளவோ நிகழ்வுகள் நாளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, அதற்கு யாராலும் பதிலளிக்க முடியாது. ''தெரியாததை, தெரியாது'' என்று ஒப்புக் கொண்டால், வாழ்க்கைப் பயணம் சுமுகமாக அமையும்.

No comments:

Post a Comment