Friday 9 October 2020

குலதெய்வ வழிபாடு.....

 குலதெய்வ வழிபாடு.....

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.
அதனால், குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர்.
கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில்,
அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும்.
சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும் வழிப்பாட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குலதெய்வ வரிசையில் வருவதில்லை.
குலதெய்வம் என்பது ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமாகும்.
ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.
அந்த வகையில்,எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு.குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா,திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.
திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய்கின்றார்கள்.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.
பகவத் கீதை தரும் விளக்கம்.......
குல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு: யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள்.
அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர்.
இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பு;வெளி நாட்டில் வாழும் என் தங்கை பேத்தி ஒரு முறை தஞ்சாவூர் மாவட்டத்தில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். மிகவும் சுட்டி. ஏழு வயது. ஆனால் பேச்சு மிகவும் அறிவுபூர்வமாக இருக்கும். அவள் சொன்னாள் தாத்தா நம்ப கும்புடற சாமிகளிலேயே, நான் நம்பறது நம்ப விலேஜ் சாமியை தான். ஏண்டா செல்லம் கோயில்ல இருக்கும் சாமி மேல உனக்கு என்ன கோவம் என்று கேட்டேன். அவள் கூறிய பதில் -" விலேஜ் சாமி கிட்ட வெபன் (ஆயுதம்) இருக்கு. என்னை காப்பாத்து என்று ப்ரே (வேண்டுதல்) பண்ணா, அவங்க உடனே ஓடி வந்து என்னை காப்பாத்துவாங்க. ஆனா கோயில் சாமி காப்பாத்த வர முடியாதே கோயிலை தான் அப்ப அப்ப மூடி விடுகிறாளே ஆனா விலேஜ் சாமி எப்பவும் தயாரா குதிரை மேல,இல்ல யானை மேல வெபனோட தயாரா இருக்காறு நம்மளை கட்டாயம் காப்பாத்துவாரு. ...... யோசித்துப் பார்த்தேன். எவ்வளவு நிதர்சனமான உண்மை. எவ்வளவு தெளிவான, களங்கமில்லா உள்ளத்தின் லாஜிக்...
ஒரு எழுத்தாளர் ஒருமறை சொன்னார், இந்து கடவுள்கள் கையில் ஆயுதம் உண்டு மனிதனை காப்பாற்ற,ஆதலால் இந்து ஆயுத்தை எடுப்பதில்லை.
மற்ற மத கடவுள்கள் கையில் ஆயும் இல்லை,ஆதலால் அவர்கள் கையில் ஆயுதத்தை எடுத்துள்ளனர் என்றார்.
(மீள்)
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment