Tuesday 18 October 2022

மகிழ்ச்சியும், நிம்மதியும் .

 மகிழ்ச்சியும், நிம்மதியும் .

நிம்மதி என்பது உங்கள் மனதில்தான் இருக்கிறது. முதலில் உங்கள் மனதில் திருப்தியை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். திருப்தியால் மட்டுமே உங்கள் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்
மனிதர்களின் வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், ஒழுக்கமாகவும், அன்பாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லா மதங்களும் அறிவுறுத்துகின்றன. ஆனால் அந்த நிம்மதி என்பது இன்று எவ்வளவு பேரிடம் இருக்கிறது, பெரும்பாலானவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.
நிம்மதி என்பது என்ன ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அதற்குப் பொருள் கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் அதனைத் தேடுகிறார்கள்.
பணமின்றி பரம ஏழையாக கஷ்டப்படும் ஒருவர், தனக்கு நிறைய பணம் கிடைத்தால் நிம்மதி கிடைத்து விடும் என்று எண்ணுகிறார்.
ஆரோக்கியமில்லாத ஒருவர். தனக்கு ஆரோக்கியம் கிடைத்துவிட்டால், நிம்மதி வந்துவிடும் என்று நினைக்கிறார்.
குழந்தைச் செல்வம் இல்லாத ஒருவர், தனக்கு அது மட்டும் கிடைத்தால் நிம்மதி ஓடோடி வந்துவிடும் என்று கருதுகிறார்.
இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு அதுதான் நிம்மதி, தங்களுக்கு இதுதான் நிம்மதி என்று நினைக்கிறார்கள்.
பணமே நிம்மதி தரும் என்று நினைக்கும் பரம ஏழையிடம் ஆரோக்கியம் இருக்கிறது. மக்கள் செல்வம் இருக்கிறது. இப்படி பல விஷயங்கள் அவரிடம் இருக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் அவரால் நிம்மதியைக் காண முடியவில்லை. அவர் தன்னிடம் இல்லாத பணம் ஒன்றில் தான் நிம்மதி இருக்கிறது என்கிறார்.
இந்த ஏழையிடம் இல்லாத பணம் ஆரோக்கியமில்லாத இன்னொருவரிடம் இருக்கிறது. அனால் அவரோ ‘பணம் இருந்து என்ன பயன், எனக்கு ஆரோக்கியம் இல்லை. அதனால் நிம்மதி இல்லை’ என்கிறார்.
ஆரோக்கியமும், பணமும் நிறைந்த ஒருவர் குழந்தைச் செல்வம் என்கிற நிம்மதி தன்னிடம் இல்லையே என்கிறார். இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளும்போது மனிதன் தன்னிடம் இல்லாத ஒன்றில் தான் நிம்மதி இருப்பதாக சொல்கிறான். தன்னிடம் இருப்பவற்றை பெருமையாக நினைத்துப் பார்ப்பதே இல்லை.
ஆனால் நிம்மதி என்பது பணத்திலோ, ஆரோக்கியத்திலோ, மக்கள் செல்வத்திலோ இல்லை. அவரவர் மனதில்தான் இருக்கிறது.
பணத்தில் நிம்மதி இருக்கிறது என்றால் பணம் படைத்தவர்கள் எல்லாம் நிம்மதியாக இருக்க வேண்டுமே, அவர்கள் அதைத்தவிர இன்னொன்றில் அல்லவா நிம்மதி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
நிம்மதி என்பது உங்கள் மனதில்தான் இருக்கிறது. முதலில் உங்கள் மனதில் திருப்தியை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். திருப்தியால் மட்டுமே உங்கள் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
திருப்தி என்பது எப்படி வரும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் கல்வி, தகுதி, உழைப்புத்திறன் போன்றவைகளை வைத்து உங்களையே நீங்கள் கணக்கிட வேண்டும். உங்கள் திறனுக்கு தக்கபடி உங்களால் உழைக்க முடிகிறது. உங்களால் பொருள் ஈட்ட முடிகிறது. அந்த பொருளுக்குத் தக்கபடி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த வாழ்க்கை நிச்சயமாக உங்களுக்கு நிம்மதி தரும்.
உங்கள் வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். ஒப்பிடும்போது முதலில் ஒப்பீடாகவே தெரியும். ஆனால் திரும்பத் திரும்ப ஒப்பிடும்போது பொறாமையாக விஸ்வரூபம் எடுத்துவிடும்.
அந்த பொறாமை உங்களுக்குள் இருக்கும் நிம்மதியைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கும். பொறாமை முழுமையாக வளர்ந்து விடும்போது, நிம்மதியை நீங்கள் முற்றிலுமாக இழந்து விடுவீர்கள்.
அடுத்து, யார் மீது நீங்கள் பொறாமைப்படுவீர்களோ அவரைப் பற்றியே நீங்கள் நினைக்கத் தொடங்குவீர்கள். உங்களை நீங்கள் மறக்கத் தொடங்குவீர்கள். உங்கள் வளர்ச்சி, திறன் போன்றவை அந்த நேரத்தில் குறையத் தொடங்கும். நீங்கள் வீழ்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கி விடுவீர்கள்.
அதனால் நீங்கள் யார் மீதும் பொறாமை கொள்ளாதீர்கள். மதங்கள் பொறாமையை அழிக்கச் சொல்கின்றன.
நீங்கள் யாரிடமும் குரோதம் கொள்ளாதீர்கள். நீங்கள் யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாதீர்கள். பொறாமை, குரோதம், காழ்ப்புணர்ச்சி யாரிடம் இல்லையோ அவர்களிடம் மகிழ்ச்சி, அன்பு, சகிப்புத் தன்மை போன்றவை நிலைத்திருக்கும்.
அவர்கள் நிம்மதி உள்ளவர்களாக வாழ்வார்கள்.

No comments:

Post a Comment