மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
02.10.2022 ஞாயிற்றுக்கிழமை ஏழாம் நாள் மாலை அன்னை மீனாட்சி தண்ணீர் பந்தல் அமைத்தல்
Navarathiri_festival_2022-Day-7-02.10.22-Sri Meenakshi Ambal setting up water pond (one among 64 THE SACRED play of someswarar swamy)
காடுவெட்டிய சோழன் இராசேந்திர பாண்டியனுக்கு ஓலை ஒன்றினை அனுப்பினான்.
அதில் எனது மகளை அரசசிங்கனுக்கு மணம் முடித்து விட்டேன். ஆதலால் நீ பாண்டிய நாட்டை அரசசிங்கனிடம் ஒப்படைத்து விடு. இல்லையேல் சோழபடை உன் நாட்டின்மீது போர் தொடுக்கும். பின் போரில் வெற்றி பெற்று அரசசிங்கனை பாண்டிய நாட்டின் அரசனாக்கி விடுவேன் என்று எழுதி இருந்தான்.
மதுரைக்கு மிகஅருகில் சோழப்படை பாண்டியனின் வருகைக்காக காத்திருந்தது.
ஓலையை படித்தபின் இராசேந்திர பாண்டியன் திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரிடம் “எம்பெருமானே, நள்ளிரவில் தனியனாய் உன்னை வழிபட்ட உன் பக்தனாகிய காடுவெட்டிய சோழன், இப்போது எனக்கு விரோதமாக படையெடுத்து வந்துள்ளான். அன்று அவனுக்கு துணையாக இருந்த தாங்கள் இன்று அவனுடைய செயலுக்கும் துணைபுரிவீர்களா?” என்று மனம் வருந்திக் கேட்டான்.
அப்போது “பாண்டியனே, நீ கலங்க வேண்டாம். உன்னுடைய சிறிய படையுடன் நாளை சோழனை எதிர்கொள்வாய். வெற்றியை உமதாக்குவோம்” என்று தெய்வாக்கு வானில் கேட்டது.
இறைவனாரின் தெய்வாக்கினைக் கேட்டதும் இராசேந்திரன் அரண்மனை திரும்பி மறுநாள் சோழனுடனான போருக்கு ஆயத்தமானான்.
இறைநம்பிக்கையில் சோழனின் பெரும்படையை எதிர்த்தான் இராசேந்திர பாண்டியன். போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இறைவனார் கடும் வெப்பத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தினார்.
சோழ பாண்டிய படைவீரர்கள் தாகத்தினால் களைப்படைந்தனர். நிழலைத் தேடத் தொடங்கினர் இருபடை வீரர்களும். அப்போது பாண்டியனின் படைக்கு இடையில் இறைவனார் சிவனடியார் வேடம் தாங்கி தண்ணீர்ப் பந்தல் வைத்தார்.
பாண்டியனின் படைவீரர்களுக்கு தண்ணீரை வழங்கினார். இறைவனார் அளித்த நீரினை உண்ட பாண்டியப்படைவீரர்கள் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் சோழப்படையை எதிர்த்து போரிட்டு எளிதில் வென்றனர். காடுவெட்டிய சோழனும், அரசசிங்கனும் கைது செய்யப்பட்டனர்.
இராசேந்திர பாண்டியன் அவர்களை மன்னித்து விடுதலை செய்தான். காடுவெட்டிய சோழனை மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பினான். இராசேந்திர பாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்தான்.
No comments:
Post a Comment