பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள கடைக்கு சென்ற பெண் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் விநாயகர் சதூர்த்தி விழா வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமாவில் உள்ள கடை ஒன்றில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு கடைக்கு சென்ற 54 வயது மதிக்கத்தக்க அந்நாட்டு பெண் ஒருவர், திடீரென அங்குள்ள விநாயகர் சிலைகளை வேண்டுமென்றே உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமுக வலைதளகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் எனவே அவர் மீது மத அடையாளங்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனங்கள் வலுக்க தொடங்கியுள்ளன. இதற்கு கடும் எதிர்வினை ஆற்றியுள்ள பஹ்ரைன் மன்னரின் ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான காலித் அல் கலீஃபா, அந்த பெண்ணின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றார். மத அடையாளங்களை மீறுவது பஹ்ரைன் மக்களின் இயல்பு அல்ல. இது ஒரு குற்றம். இங்கே, அனைத்து மதங்களும், பிரிவுகளும், மக்களும் இணைந்து வாழ்கின்றனர். சிறிய முஸ்லீம் நாட்டில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஆசிய தொழிலாளர்கள் வாழ்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment