Monday 31 August 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 அந்த மனிதரை ஒரு எம்.பி மறைந்துவிட்டார் என எளிதில் கடந்துவிட முடியாது. ஒரு எம்பியாக தொழிலபதிராக இன்று இருந்திருந்தாலும் அவர் கடந்த காட்டாறும், சந்தித்த அவமானமும், அதை கடின உழைப்பாலும் தன் சிரித்த முகத்தாலும் தாண்டிவந்த அந்த சாதனை கொஞ்சமல்ல‌

அது அகதீஸ்வரத்தின் மிகபெரும் குடும்பம், அதாவது ஏகபட்ட எண்ணிக்கை உண்டு அதில் கடைசி பிள்ளையாக ஹரிகிருஷ்ண நாடாருக்கு பிறந்தவர்தான் வசந்தகுமார்
வறுமை இருக்குமிடத்தில்தான் பிள்ளைகள் அதிகமிருப்பார்கள், வசதி மிக்க கோடீஸ்வரர்கள் ஒரு பிள்ளைக்கு ஏங்குவார்கள் எனும் தத்துவம் அக்குடும்பத்திலும் உண்மையாயிற்று, வீடெல்லாம் பிள்ளை அதை விட பெரும் எண்ணிக்கையில் வறுமை
அக்குடும்பத்தின் முழு பொறுப்பும் மூத்த மகனான குமரி அனந்தன் தலையில் விழுந்தது. அம்மனிதனும் கட்சி ஒருபக்கம் குடும்பம் ஒரு பக்கம் என ஓயாது உழைத்து கொண்டே இருந்தார்
குமரி அனந்தனின் தமிழும் இலக்கிய அழகும் பன்மொழிபுலவர் கா.அப்பாதுரையாரின் சாயல் , குமரி அனந்தன் மட்டும் திராவிட கட்சியில் இருந்திருந்தால் மிக எளிதாக அண்ணாதுரை, கருணாநிதி இடத்தை பிடித்திருப்பார்
ஆனால் அந்த தேசியவாதி அந்த தேசவிரோதகும்பலோடு சேராமல் தேசியவாதியாய் நின்றார், காமராஜரின் கரங்களின் அருகில் நின்றார்
அக்கால காங்கிரஸில் சம்பாதிக்க முடியாது, காமராஜரோடு இருந்தால் சுத்தமாக முடியாது. இந்நிலையில்தான் அந்த 10 வயதிலே குடும்பத்துக்காக உழைக்க வந்தார் வசந்தகுமார்
சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் உண்மை அதுதான், 12 வயதிலே திருவிழாவில் சர்பத் கடை, பலூன் என சிறு சிறுவியாபாரத்தில் அவர் இறங்கியிருந்தார்
அந்த சுசீந்திரமும், அகதீஸ்வரமுமே அவருக்கு வியாபாரம் கற்று கொடுத்தது
நல்ல கூட்டு குடும்பம் என்பது ஒரு பாண்டவர் பூமி, அயோத்தியின் அரண்மனை. மூத்தவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும், அண்ணனின் சுமை குறைக்க தம்பிகளும் ஓடிவருவது அங்குதான் நடக்கும்
படித்து முடித்து ஒன்றுமில்லாமல் சென்னைக்கு வந்த அவருக்கு அன்று தென்னகத்தில் இருந்து வந்த, வள்ளியூர் சந்தையில் 10 வயதிலே பொதிசுமந்து உழைக்க ஆரம்பித்த அந்த வி.ஜி பன்னீர்தாஸின் கடை வேலை கொடுத்தது
கவனியுங்கள், அண்ணன் காங்கிரஸ் தலைவராக இருந்தபொழுதும் தம்பி ஒரு கடையில் வெறும் சேல்ஸ்மேனாகத்தான் இருந்தார்
வி.ஜி.பி குழுமம் அப்பொழுது மர்பி ரேடியோ உட்பட வீட்டு உபயோக கடையினை முக்கியமாக கொண்டிருந்தது, வசந்தகுமார் எனும் தொழிலதிபருக்கான முதல் பாடம் அங்குதான் நடத்தபட்டது அல்லது தத்தி தத்தி வசந்தகுமாரும் படித்து கொண்டார்
ஆனால் கட்சி சார்பான மோதல் ஒன்றில் அவருக்கு காவல்நிலைய சிக்கல் வந்தது, சென்னையில் சில கட்சிகளை பகைத்தால் தொழில்நடத்த முடியாது என அஞ்சிய விஜிபி குழுமம் அவரை கைவிட்டது
இருந்த வேலையும் போனதில் வசந்தகுமார் அசரவில்லை. உழைப்பவனுக்கு வறுமையும் சோகமும் ஒருகாலமும் இருக்காது. அதுவும் விவரம் தெரிந்த வயதில் இருந்து உழைக்க தெரிந்தவனுக்கு எல்லாமே தூசு
வசந்தகுமாருக்கு வாய்ப்பு வி.ஜி பன்னீர் தாஸின் மறைவில் வந்தது. வீட்டு உபயோக பொருளை விட ரியல் எஸ்டேட்டில் பெரும் பணம் குவியும் என முதலில் கண்டது பன்னீர்தாஸே. அவர்களின் தொழில் முழுக்க ரியல் எஸ்டேட் பக்கம் தாவிற்று
பன்னீர்தாஸின் மறைவுக்கு பின் விஜிபி குழுமம் இப்போது இருக்கும் திமுக போல் திசைமாறிற்று
நிச்சயம் தமிழகம் முழுக்க மிக பெரும் வீட்டு உபயோக பொருள் சந்தையினை கைபற்றும் வாய்ப்பும், வசதியும் அனுபவமும் விஜிபிக்குத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் திசை மாற அதைசாதுர்யமாக கைபற்றினார் வசந்தகுமார்
ஒரே நாளில் அவரின் சாம்ராஜ்யம் எழவில்லை, சென்னை டி.நகரில் மெல்ல மெல்ல அவரின் வியாபாரம் பெருகிற்று
அந்த சிரித்த முகமும், எல்லோரிடமும் பணிந்து போகும் அக்குணமும் அவருக்கு தொழிலில் வெற்றியினை கொடுத்தன. 7 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய அந்த நிறுவணம் 74 கிளைகளோடு வளர்ந்து நிற்கின்றது
அவரின் உழைப்பு அசாத்தியமானது. உழைப்பது எல்லோரும் உழைக்கலாம் ஆனால் வெற்றிபெற தெய்வ அனுக்கிரகம் வேண்டும்
அந்த மாபெரும் வெற்றியிலும் வசந்தகுமார் அந்த எளிமையிலே இருந்தார். பலூன் விற்றபொழுது இருந்த அதே எளிமையான சிரிப்புதான் கோடிகளில் வர்த்தகம் செய்யும்பொழுதும் இருந்தது
அதில் கர்வமோ அகந்தையோ யாரும் காணமுடியாது
தொழிலில் அவரும் வளர்ந்தார், எண்ணற்றவர்களை வளர்த்தும் விட்டார். அவரால் அழிந்தவர்கள் என எதிரிகளை கூட நீங்கள் காணமுடியாது ஆனால் வாழ்ந்தவர்கள் ஏராளம்
வியாபாரத்தில் விஜிபியின் இடத்தை பிடித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார்
அரசியலில் வந்து சம்பாதிப்பவர்கள் மத்தியில், சம்பாதித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் அவர்
விஜி பன்னீர்தாஸின் இடத்தை வியாபரத்தில் பிடித்த அவர், தன் அண்ணனின் இடத்தை காங்கிரஸிலும் பிடித்ததுதான் ஆச்சரியம்
இரண்டு குதிரையிலும் அவரின் சவாரி வெற்றி சவாரி, காலம் வழிவிட்டிருந்தால் இந்நேரம் மத்திய அமைச்சராக அவர் இருந்திருப்பார். ஆனால் விதி அது அல்ல‌
அவரிடம் எமக்கு பிடித்த விஷயம் பல உண்டு. அவர்மேல் ஊழல் வழக்கு என கொடிய எதிரியும் கைகாட்ட முடியாது. தொகுதிக்கு சொந்த பணம் செலவழித்தாரே அன்றி கட்சி பணம் எதிர்பார்த்தவரும் அல்ல‌
வியாபாரத்துக்காக கட்சியினை அவர் பயன்படுத்தியவருமில்லை, வருமான வரி உட்பட சிக்கல்களில் அவர் சிக்கியவரும் இல்லை
நல்ல இந்தியனாக, நல்ல வியாபாரியாக , நல்ல தேசியவாதியாக கடைசி வரை இருந்தார்
ஆம், அவர் தேசியவாதி கடைசி வரை நான் இந்தியன், காந்தி வழி தேசியவாதி என நின்று சாதித்தார்
தன் பதவிக்கும், தொழிலுக்கும் நாளுக்கொரு கட்சியில் இருப்போர் மத்தியில் அந்த தேசியவாதி மிகபெரும் நன்றிக்கும் வணக்கத்துக்கும் உரியவர்
இந்தியாவின் தென்முனை எக்காலமும் தேசியத்தில் நிலைத்திருக்கும் என நேசமணி, காமராஜர், டென்னிஸ் போன்றோரின் வாரிசாக அங்கு நின்று வென்று தேசிய கட்சியின் எம்.பி எனும் நிலையில் தேசிய பாரம்பரியத்தை தாங்கி நின்றவர்
அவரின் உழைப்பும், நாட்டுபற்றுமே அம்மனிதன் பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணம்
ஆம், அவன் உழைத்தான். கடுமையாக உழைத்தான், சிரித்து சிரித்து உழைத்தான், இந்நாட்டை நேசித்து கொண்டே உழைதான்
ஒரு இடத்திலாவது அவன் தன் பணத்தை தவறாக செலவழித்தான் என நீங்கள் பார்க்க முடியாது, பண திமிரில் அடாது செய்தான் என ஒரு நொடியினை அவன் வாழ்வில் காட்ட முடியாது
வசந்தகுமார் எனும் அந்த தொழிலதிபர் பல்லாயிரம் ஊழியர்களோடுதான் பணத்தை பகிர்ந்தார், உண்டார், ஊட்டினார், அவர்கள் குடும்பத்தையும் தாங்கி நின்றார்
நான் இந்த சாதி என அவர் பெருமை பேசியதில்லை, மற்ற சாதியினை இழுத்தும் அரசியல் செய்யவில்லை
இட ஒதுக்கீடு என அவர் கிளம்பவில்லை, இரண்டாயிரம் ஆண்டு அடிமைகள் நாம் என கொக்கரிக்கவில்லை
தமிழறிவு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தமிழால் பிழைக்கவில்லை, உழைப்பால் பிழைத்தார்
உழைப்பு ஒன்றே ஒரு மனிதனை உயர்த்தும் என்பதற்கு பெரும் உதாரணமாக இருந்தார்
உறுதியாக சொல்லலாம் , அவர் கடுமையான உழைப்பாளி உழைப்பு ஒன்றாலே விஜிபியின் இடத்தை அனாசயமாக பிடித்த அளவு நுட்பமான உழைப்பாளி
அந்த தேசியவாதி, உழைப்பாளி இனி இல்லை. அந்த சிரித்தமுகம் இனி இல்லை
காங்கிரஸின் தூணாக நின்று தேசியத்தை தெற்கே தாங்கி நின்ற அந்த அரண் இனி இல்லை
உழைப்பு ஒன்றால் மட்டுமே வாழும், உழைப்பு ஒன்றாலே உயர்ந்த குலத்தில் அதை உலகுக்கு உரக்க சொன்ன நட்சத்திரமான‌ எங்கள் தென்னகத்தின் இரண்டாம் பன்னீர்தாஸ் இனி இல்லை
கேரளாவில் இருந்திருந்தால் எங்களை வாழவிட்டிருக்க மாட்டார்கள், தமிழகத்தில் கன்னியாகுமரி இணைந்ததால் உழைத்து உயர்ந்தோம் என பல குமரி மாவட்ட தமிழர்கள் சொன்னதை நிரூபித்து காட்டி, குமரி விடுதலை போர் நியாமனது என உரக்க சொன்ன அந்த வசந்தகுமார் இனி இல்லை
அவர் குடும்பத்தாருக்கும், கட்சிகாரர்களுக்கும், அவரின் நிறுவண ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தன் குடும்பத்து அர்ஜூனனை இழந்து நிற்கும் அந்த தர்மன் குமரி அனந்தனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
"உழைக்க கற்றுகொடுத்த மனிதனை கண்ணீரோடு அல்ல மன நிறைவோடு மரியாதையாக‌ அனுப்பு" என்பார் டிங் ஜியோ பெங்
மிகபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிவிட்டு எத்தனையோ குடும்பங்கள் பிழைக்க வழி செய்துவிட்டு, தேசியம் தென்னகத்தில் நிலைத்திருக்க வழிசெய்துவிட்டு செல்லும் அந்த உத்தமனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
இனி அந்த சிரிப்பினை எங்கே பார்ப்போம், கள்ளம் கடபமில்லா அந்த சிரிப்பினை எங்கு நோக்குவோம்
ஆம், தமிழிசை என்பர் சிரிக்கும் அந்த கள்ளங்கபடமில்லா சிரிப்பு அக்குடும்பத்தின் சொத்து
அந்த தமிழிசை அக்காவுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
அண்ணன் அமைவதெல்லாம் ஒரு வரம் அது வசந்தகுமாருக்கு அமைந்தது, அண்ணன் மகளும் அமைவதும் ஒரு வரம் அதுவும் அவருக்கு அமைந்தது
சித்தப்பன் நல்லவனாக அமைவது எல்லோருக்கும்வாய்க்காது, அந்த அதிர்ஷ்டம் தமிழிசை அக்காவுக்கும் அமைந்தது
யாரையும் குறை சொல்லாத, அடிதடியில் சம்பாதிக்காத, அநாகரிக அரசியல் செய்யாத ஒரு நல்ல ஆன்மா பிரிந்துவிட்டது
தமிழக அரசியலில் மிக அழகாக ஒளிவீசிய ஒரு நட்சத்திரம் இன்று உதிர்ந்துவிட்டது
மூப்பனாருக்கு சற்றும் குறையா வகையில் தேசியத்தை காத்து நின்ற அந்த ஜோதி அணைந்துவிட்டது
காலமெல்லாம் உழைத்த அந்த ஆன்மா இறைவனிடம் இனியாவது ஓய்வில் இருக்கட்டும், அவர் செய்த புண்ணியங்களும் தானங்களும் தர்மங்களும் அவரின் குடும்பத்தை காக்கட்டும்
எத்தனையோ குடும்பங்களில் வசந்தம் வீச செய்த வசந்தகுமாருக்கு மனம் கலங்கிய அஞ்சலிகள்
ஓடும் நீரும், உழைக்கும் மனிதனும் ஒருநாளும் கெட்டு போகமாட்டான் என்பதை நீருபித்துவிட்டு உறங்க சென்ற அந்த பெருமகனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

No comments:

Post a Comment