Tuesday 17 October 2023

*கண்ணதாசன் என்ன சொல்லுகின்றார். *

 *கண்ணதாசன்

என்ன சொல்லுகின்றார். *
*“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது?” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லி விட முடியும். ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.*
*பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.*
*நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும். காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.*
*நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை விடவா அவன் உயர்ந்து விட்டான்.*
*ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.*
*சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும். ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை வரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.*
*ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டு பிடிக்க முயலுகிறான். ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான். அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை. வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.*
*ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.*
*பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான். “கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?” “அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.*
*அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது அவனுக்குத் தெரியுமா? அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம். ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.*
*`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!`மரணம்’ என்று உணரப்படும் போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது...!*
*'இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை. எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.*
*ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.*

No comments:

Post a Comment