Wednesday 5 April 2023

உண்மையான அன்பும் நம்பிக்கையும்.

 உண்மையான அன்பும் நம்பிக்கையும்.

எட்டு வயதுச் சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தைக் காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான். சிறுவனின் கையில் இருந்த நாணயத்தைத் தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார்.
சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாகச் சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான். பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்குச் சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டுள்ளான்.
அதற்கு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டுப் பாடி என்னைத் தூங்க வைப்பது வரை என் தாய் தான்.
தற்போது அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான்.
அதற்கு அந்தக் கடைக்காரர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவன் தானே வேண்டும் நான் தருகிறேன் என்று கூறி அவனை உள்ளே அழைத்து அவனிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் கொடுத்தார். இதைக் கொண்டு போய் உன் தாயிடம் குடிப்பதற்கு கொடு, உன் தாய் குணமாவார் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை சிறப்பு மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்தனர்.
சிறுவனின் தாய்க்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தாயும் உயிர் பிழைத்தார். அவரிடம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காகன பில் காட்டினார்கள். தனக்கு சிகிச்சை செய்த செலவுத் தொகையை கண்ட அந்த ஏழைத்தாய் அதிர்ந்து போனார். ஆனால் மருத்துவர்கள் அந்த ஏழைத் தாயிடம் கவலைப் படாதீர்கள் உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் ஒருவர் மருத்துவமனையில் செலுத்தி விட்டார். அவரே உங்களிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார் என்று கூறி அந்த கடிதத்தை தாயிடம் கொடுத்தனர்.
அதை வாங்கி படித்தார் தாய் அதில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு அல்ல நான் ஒரு நிமித்தம் (கருவி) மட்டுமே. ஆனால் ஒரு ரூபாய்க்கு இறைவன் வேண்டுமென்று கடை வீதியில் நம்பிக்கையோடு அலைந்த உங்கள் அப்பாவி மகனுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.
*மனதில் நம்பிக்கை இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்.*

No comments:

Post a Comment