Saturday 19 March 2022

செயல்களே செம்மையானது.

 செயல்களே செம்மையானது.

உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாகபேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது...
மேலும், இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது...
மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு வந்து சேர்கிறது...
பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே!, பழிச் சொல்லை விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சிலர் மற்றவர்களைப் பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்துப் பேசுவர். அடுத்தவர்களைக் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க மாட்டார்கள்...
ஒரு கட்டத்தில் அவர் தன் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். இறுதி வரையில் அவருக்குச் சொந்தம், உறவு என யாரும்
இல்லாமலேயே போய் விடும்...
*'புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்*
*அறம்கூறும் ஆக்கம் தரும்.’ - என்றார் வள்ளுவர்.*
ஒருவர் இல்லாதபோது அவரை பழித்துப் பேசி, அவர் இருக்கும்போது பொய்யாக வேறொன்று சொல்லி உயிர் வாழ்வதை விடச் சாதல் நல்லது என்கிறார்...
ஆனால்!, இன்று வம்புப் பேச்சுகள் இறந்தவரையும் விட்டு வைப்பதில்லை என்பதுதானே நடப்பியல்!.
ஆம் நண்பர்களே
உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்கள் மீது எக்காரணம் கொண்டும் புறம் சொல்லக் கூடாது.
அந்தத் தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது, ஒருவரை புகழ்ந்து பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இகழ்ந்துப் பேசாதீர்கள்.
மற்றவர்களைப் பற்றி புறம் கூறாதிருக்கும் வகையில் நம் அகம் மேம்பட வேண்டும். புறங்கூறலைத் தவிர்த்து நம் அகத்தை மேம்படுத்துவோம்.

No comments:

Post a Comment