Monday 16 May 2022

அமைதியும் பக்குவமும்.

 அமைதியும் பக்குவமும்.

நாம் ஒரு செயலைச் சரி என்று தீர்மானித்துக் கொண்டு வைத்து இருப்போம். அந்தச் செயலை மற்றொருவர் மீறும் போது நம்மை அறியாமலே நமக்கு மற்றவர் மீது சினம் வருவதற்கான முதல்படி ஆகும்.
உலகத்தில் உள்ள அனைவரையும் நம்மால் சரியான நேர்கோட்டில் கொண்டு செல்ல முடியாது. இதனால், நமது வேலையும் செய்ய முடியாமல் தேவையில்லாத பிரச்சனைகளில் நாம் செல்ல நேர்ந்திடும்.
ஓர் அரசன் மிகவும் முன்கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்து இருந்தார். அவரைச் சந்தித்துத் தன் குறையைச் சொன்னான் அந்த மன்னன்..
அவர் மன்னனிடம்,'
' என்னிடம் அதிசயமான பொன்னால் செய்த ஒரு குவளை ஒன்று இருக்கிறது.அதில் தண்ணீரை நிரப்பிக் குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம் இல்லாமல் போய் விடும் என்று சொல்லி அந்தக் குவளையை அவனிடம் கொடுத்தார்.
"உனக்குச் சினம் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக் குடி; பிறகு சினமே வராது" என்று கூறி விட்டுச் சென்றார்.
அன்றில் இருந்து அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.
பல வருடங்கள் சென்றன. அந்தக் குவளையைக் கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார்.
அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவளைக் கொடுத்ததற்காக பலமுறை நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்.
"மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது அதிசயமான குவளை அல்ல, சாதாரணமான குவளை தான்.
''சினம்'' வரும் போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும்..
தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன.
ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறினார்.
மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும், அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
நாம் கோபப்படும் போது மற்றவர்கள் நம் மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது.
எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்.
எனவே, சினத்தைத் தணித்து அனைவரிடத்திலும், அன்பு செலுத்தி, நற்புகழ் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.

No comments:

Post a Comment