தஞ்சை தேரோட்டம்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் எனும் பெருவுடையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
அதில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5.15 மணியளவில் கோவில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பாலம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு, கோவில் வெளியே வந்து சோழன் சிலை வழியாக மேலவீதியில் உள்ள தேர்மண்டபம் வந்தடைந்தனர்.
அங்கு விதவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருள, காலை 7 மணியளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றோம். தேருக்கு முன்னர் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மன், சண்டிகேசுவரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.
நன்றி ராஜப்பா தஞ்சை
No comments:
Post a Comment