Tuesday 28 March 2023

தர்மத்தின் வழி நேர்மையின் நெறி.

 தர்மத்தின் வழி நேர்மையின் நெறி.

தைரியம் தானாய் வரும்
நேர்மையாக வாழும் மனிதர் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை, போலியான மனிதர்களே .
நல்லவர் போல் நடிக்கின்றனர் நம்பியவர்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றனர் .
அது போன்ற போலியான மனிதர்களே அச்சத்தில் வாழ்வார்கள்
நேர்மையான மனிதர்கள் அச்சத்தில் வாழ்வதில்லை.
நேர்மையான நல்ல மனிதர்களைத் தான் இறைவன் உற்றுப் பார்க்கிறார் .
நேர்மையாக வாழும் மனிதருக்கு சில காலம் கஷ்டமாகத் தெரியும், ஆனால் அவர்கள் மனதில் அச்சம் இருக்காது. காரணம் அவர்கள் தான் உண்மையில் எதிர்நீச்சல் போடக்கூடிய மனிதர்கள் நேர்மையுடன் இருப்பவர்கள்.
சில சமயங்களில் பல சங்கடங்களைச் சந்திக்கலாம் ஆனால் வீட்டுக்கும் நாட்டுக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவர்.
நேர்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது போன்ற மனிதர்களை எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் அதுபோன்ற மனிதர்களைத் தான் ஏமாளிகள் என்றும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் அப்பாவிகள் என்றும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் கூறுகின்றனர்.
அதற்காக வருந்தாமல் தன்னுடைய பாதையில் நம்பிக்கையுடன் நேர்மையாக கடந்து செல்ல வேண்டும். நேர்மை எனும் வழி சென்றால் எதிரில் வரும் மலை போன்ற கஷ்டங்களும் பனி போல் தீர்ந்து விடும்.
நேர்மை என்பது தர்மம் போன்றது அது மிகவும் சக்தி வாய்ந்தது, தர்மத்தை எவ்வாறு வெல்வது கடினமோ அவ்வாறே நேர்மையான மனிதர்களையும் வெல்வது கடினமாகும் அதற்குக் காரணம்
தர்மத்தின் வழியில் செல்லும் மனிதர்களுக்கும் நேர்மையாக வாழும் மனிதர்களுக்கும் இறைவன் அவர்களுக்குத் தெரியாமலேயே பாதுகாப்பாக இருக்கிறார்.
இதை உணர்ந்த மனிதர்கள் ஒருபோதும் தவறான வழியில் செல்வதில்லை, தங்கத்தை என்னதான் சுட்டெரித்தாலும் அது தன் நிறத்தையும் தன்மையையும் மாற்றிக் கொள்வதில்லை, சுடச் சுட சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. அது போன்று தான் நேர்மையான நல்ல மனிதர்கள் எத்தனை கஷ்டங்களைக் கண்டாலும் அவர்களின் நேர்மையான நிலை தடுமாறுவதில்லை.
அதற்குக் காரணம் அவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள், அதனால் தன்னை நம்பிய மனிதர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதில்லை, அது போன்ற நல்ல மனிதர்களின் நாவில் வெளிப்படும் வாக்கானது சத்தியவாக்காக வெளிப்படுகிறது. அவர்கள் கூறும் வாக்கைப் பலிக்கச் செய்து இறைவன் நற்பெயரை ஏற்படுத்துகிறார்.
உண்மையில் சத்தியத்தையும் தருமத்தையும் கடைப்பிடித்து நேர்மையாக வாழும் மனிதர்களே இறைவனிடத்தில் நெருங்கிய தூரத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அருகில் இருக்கும் இறைவன் அன்புடன் அரவணைத்துச் செல்கிறார். ஆகையால் அது போன்ற மனிதர்கள் எதையும் எளிதில் கடந்து செல்கின்றனர், யார் என்னதான் சொன்னாலும் சத்தியம் ஒருபோதும் பொய்யாவதில்லை, தர்மம் என்றும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. தர்மத்தின் வழியில் செல்வோரையும் தர்மம் செய்பவரையும் எவராலும் வீழ்த்த முடிவதில்லை.
ஒரு சமயம் பாரத போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கருணனை வீழ்த்த முயற்சித்தார் ஆனால் அவர் வீழ்த்தப்பட்ட போதிலும் அவர் உயிரைப் பறிக்க முடியவில்லை. காரணம் கர்ணன் செய்த தர்மம் அவர் உயிரை உடலில் இருந்து பறிக்க விடாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தது.
இதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா முதியவர் வேடமிட்டு கர்ணனிடம் யாசகமாக தான் செய்த புண்ணிய பலனைத்தையும் பெற்றார். அதன் பின்னரே கர்ணனின் உயிரைப் பறிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தானம் என்பது என்றோ ஒரு நாள் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் கொடுப்பதாகும், தர்மம் என்பது யார் என்றும் எவர் என்றும் அறியாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்து உதவக் கூடியதாகும்
தானத்தை விட தர்மமே வலிமை மிக்கது, தரத்தில் சிறந்தது ஆகையால் தன்னால் இயன்ற தருமத்தைச் செய்யுங்கள், செய்த தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்தி மிக்க மனிதர்கள் யார் என்றால் சத்தியத்தின் வழியிலும் தர்மத்தின் வழியிலும் நேர்மையாக வாழும் மனிதரே
தரத்தில் சிறந்த மனிதராவார்.

No comments:

Post a Comment