Friday 24 March 2023

மன வியாதி

 மன வியாதி

நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
இது நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி, தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.
எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பைக் காட்டுங்கள்.சந்தேகம் ஒன்று வந்து விட்டால் , நிம்மதி போய் விடும், சந்தேகம் இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்காது.
ஒரு குட்டிப் பெண்ணும் குட்டிப் பையனும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்தப் பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்தக் குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.
அந்தப் பையன் சொன்னான்,
''எங்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உனக்குத் தருகிறேன். நீ வைத்து இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்குத் தருகிறயா என்று கேட்டான்.
குட்டிப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்தப் பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்து விட்டு அந்தக் குட்டிப்பெண்ணிடம் இனிப்புகளைக் கேட்டான்.
குட்டிப் பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிக் கொண்டாள்.
அன்று இரவு அந்தக் குட்டிப்பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்தப் பையனுக்கு உறக்கமே வரவில்லை.
அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்து இருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் சிரமப்பட்டான்.
சந்தேகம் ஒருவர் மனதைப் பற்றிக் கொண்டால்,அது மனநோயாக மாறி விடுகிறது.
சந்தேக மனப்பான்மை கொண்டவர்கள் தன்னால் அதைச் செய்ய முடியமா இதைச் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் மகிழ்ச்சிப் பின்வாசலால் போய் விடும் என்பார்கள்.
ஆம் இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷக்கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்று விடும்

No comments:

Post a Comment