பதட்டம் தணிக்க பெரும் துணை.
சிலர் எப்போதாவது பதற்றம் அடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கு எல்லாம் பதற்றம் அடைகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பயம், அச்சம், பதற்றம் ஆகியவை நம்மைக் கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் இருந்து வருகிறது.
பயமான அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் இருக்கும்போது, நாம் எல்லோருமே பதற்றம் அடைந்து இருப்போம். இது இயற்கை.
இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, சட்டென காரணம் இல்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மனநலக் கேடுகளை விளைவிக்கிறது.
இருந்த போதிலும் ஓரளவு பதற்றம் நல்லதுதான். அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதும்கூட.
இது எதிர்பாராத விபத்திலிருந்தோ, தாக்குதலிலிருந்தோ நம்மைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, கவனத்துடன் இருக்கச் செய்து, வேலைகளைத் திறம்படச் செய்ய உதவுவதுடன், சிக்கல்களைச் சமாளிக்கத் தூண்டு கோலாகவும் இருக்கிறது.
ஆனால், எல்லா நேரமும் பதற்றமாக இருக்கும்போது உடல், மனஅளவில் பல உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எப்பொழுதும் கவலையுடன் இருத்தல், கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதில் எரிச்சலடைவது, மனச் சோர்வு போன்ற மனச் சிக்கல்களும் ஏற்படும்.
பதற்றம் காரணமாக வரும் உடல்,மன உபாதைகள் வேறு சில நோய்களுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. எனவே, பதற்றம் காரணமாக இந்த உடற் சிக்கல்கள் வரும்போது, வேறு ஏதோ நோய் வந்துவிட்டதாக தவறாகக் கணிக்கக் கூடாது.
பதட்டம் என்பது ஒரு மன நோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக் கூடும்.
உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பதற்றத்தின் அறிகுறிகள், எந்தவிதமான சூழ்நிலையில் ஏற்படுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, எப்படிச் சரியாகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
*எப்பொழுதும் தளர்வு நிலையில் இருப்பது, உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தத்தின் காரணம் அறிந்து திறம்பட சமாளிப்பது பதற்றத்தைச் சரிசெய்ய உதவும்.*
*மெல்லிய இசையை ஒலிக்க விட்டு கண்களை மூடி இசையினையும், உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு அமர்ந்திருங்கள். நடைபயிற்சி,உடற்பயிற்சி, விளையாட்டு,யோகா போன்றவையும் பதட்டம் தணிக்க பெரிதும் உதவும்.*
*மிகையாக நகைச்சுவை நூல்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் நூல்கள் அல்லது இவை தொடர்பான வலை தளங்களைப் பார்வையிடுங்கள்.*
*பதற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். மருந்துகள் தவிர மனோதத்துவ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.*
*தேவையின்றி பதட்டம் அடைவதை விட்டு விட்டு, உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும், சமூகத்தையும் மகிழ்வோடு வைத்திருங்ககள்.*
No comments:
Post a Comment