நிறைகுடம்.
“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்.
அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத்தான் ஆணவம் வருகிறது. ஆனால், பெரும்பாலான நிறை குடங்களுக்கு அது வருவதில்லை.
ஆணவத்தின் மூலம் வெற்றியோ, லாபமோ கிடைப்பது இல்லை; அடிதான் பலமாக விழுகிறது.
தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;
தான் அமைச்சராகி விட்ட போதையில் மக்களை அலட்சியப்படுத்தும் அரசியல் வாதிகள்,
தான் சொன்ன ஏதோ ஒன்றைப் பொது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாளும் எதையாவது உளறிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;
இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய்
விடுகின்றார்கள்.
‘எதற்கும் தான் காரணமல்ல'; என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை. ‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், பொது இடங்களில் அவமானப்படாமல் தப்பியது இல்லை.
ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; திரைப்பட நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு. ஆனால், அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயல் காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பி விடுகிறது.
*'நம்மிடம் ஏதும் இல்லை' என்பது ஞானம். நம்மைத் தவிர ஏதும் இல்லை' என்பது ஆணவம்.*
*ஞானம் , பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது. ஆனால், ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.*
*ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் நம்மையே அழிக்கும்.*
No comments:
Post a Comment