Monday 25 February 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒளவையாரின் தனிப்பாடல் - கற்றது கைம்மண் அளவு
தமிழ் கூறும் நல் உலகம் யாரை இழந்தாலும் ஒளவையை இழந்து விடக் கூடாது.
ஒளவையின் பாடல்கள் அத்தனை எளிமையானவை, இனிமையானவை, நடைமுறைக்கு, அன்றாட வாழ்க்கைக்கு வழி காட்டுபவை.
கொஞ்சம் படித்து விட்டு ,ஏதோ எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று பேசுபவர்களைக் கண்டு ஒளவை சொல்லுகிறாள்...
"கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலை மகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். சும்மா நான் ரொம்பக் கற்றவனா, நீ ரொம்பக் கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்"
பாடல்
கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்
பொருள்
கற்றது = இதுவரை கற்றது
கைம் மண்ணளவு = கையில் உள்ள மண் அளவு
கல்லா து = கல்லாதது
உலகளவென் (று) = உலகம் அளவு பெரியது
உற்ற = உடைய
கலைமடந்தை = கலைமகளான சரஸ்வதியும்
ஓதுகிறாள் = படிக்கின்றாள்
மெத்த = பெரிய
வெறும் = வெறும்
பந்தயம் = நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பந்தயம்
கூற வேண்டாம் = கட்ட வேண்டாம்
புலவீர் = புலவர்களே
எறும்பும் = சின்ன எறும்பு கூட
தன் = தன்னுடைய
கையால் = கையால்
எண் சாண் = எட்டு சாண் அளவு உயரம் இருக்கும்
நமக்கு ஏதோ ஒரு துறையில் ஏதோ கொஞ்சம் தெரியும் - கணிதமோ, அறிவியலோ, வர்த்தகமோ ஏதோ ஒன்றில் கொஞ்சம் தெரியும். மற்றவனுக்கு சமையல் தெரியலாம், சங்கீதம் தெரியலாம், படம் வரையத் தெரியலாம், நன்றாக விளையாடாத் தெரியலாம். நமக்கு அதில் ஒன்றும் தெரியாமல் இருக்கலாம்.
ஒவ்வொருவரும், அவர்கள் துறையில் பெரியவர்கள்தான்.
இதைச் சொல்ல வந்த ஒளவை, மூன்று பெரிய விஷயங்களை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறாள்.
முதலாவது, இந்த உலகில் கடல் எவ்வளவு பெரியது. அந்த கடலின் கரையிலும், கடலின் அடியிலும் எவ்வளவு மண் இருக்கும். இந்த உலகம் எல்லாமே மண்ணால் நிறைந்ததுதான். அவ்வளவு மண்ணில், ஒரு பிடி மண் எடுத்தால் எவ்வளவு இருக்கும். இந்த பூமியை மட்டும் ஏன் கொள்ள வேண்டும். இந்த அண்ட சராசரங்களை எடுத்துக் கொண்டால் அதில் எவ்வளவு மண் இருக்கும். கற்பனை கூடச் செய்ய முடியாது. அந்தக் கோடானு கோடி அண்டத்தில், ஒரு பிடி மண்ணைக் கையில் எடுத்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு நாம் படித்தது. படிக்காதது இந்த அண்டத்தில் உள்ள மண்ணின் அளவு. ஏதாவது தொடர்பு இருக்கிறதா. இதை வைத்துக் கொண்டு நாம் பெரிய ஆள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
இரண்டாவது, நமது மதத்தில் ஒரு துறைக்கு ஒரு கடவுள் என்றால் அவர் தான் அதில் அதிக பட்சம் ஆற்றல் உள்ளவராக இருப்பார். அவருக்கு மேல் ஒன்றும் இல்லை. அவரால் முடியாதது எதுவும் இல்லை. இலக்குமி தான் செல்வத்திற்கு அதிபதி என்றால், அவளிடம் எல்லாம் இருக்கிறது. அவள் தினமும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியைச் சொன்ன நம் முன்னவர்கள், அவள் கூட அனைத்தையும் படித்து முடித்து விடவில்லையாம். இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறாளாம். கல்விக் கடவுளே கல்வியை முற்றுமாக அறிந்து கொள்ளவில்லை என்றால் கல்வியின் அகல ஆழத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கையில் ஏடு உள்ளவள் என்பார் கம்பர்
அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்றுமிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயி ரும்படைப் பாளைப் பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே
என்பது சரஸ்வதி அந்தாதி.
புத்தகம் வித்யார்த்தி இலட்சணம் என்பது வடமொழி வழக்கு.
இந்தக் காலத்தில் பிள்ளைகளிடம் ஏண்டா படிக்காமல் டிவி பார்த்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் "எல்லாம் படிச்சாச்சு" என்கிறார்கள்.
சில பெண்களிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டால், "படித்து முடித்து விட்டு சும்மா இருக்கிறேன்" என்பார்கள். படித்து முடிக்க முடியுமா?
மூன்றாவது, சரஸ்வதி ஏதோ நேரம் கிடைக்காமல், கிடைத்த நேரத்தில் படிக்கவில்லை.ஓதுகிறாளாம். ஓதுதல் என்றால் திருப்பித் திருப்பிச் சொல்லுதல். மனனம் செய்தல். புரியும்படி சொல்லுதல்.
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், நாம் படித்ததை நாலு பேர் தெரியச் சொன்னால் தானே நமக்குப் பெருமை. இல்லை என்றால் நாம் படித்தது யாருக்குத் தெரியும் என்று நினைத்து எந்நேரமும், எல்லா விஷயங்களிலும் ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டே இருப்போம். வள்ளுவர் சொல்கிறார், அடக்கமாக இருந்தால் பெரிய புகழ் வந்து சேரும் என்று.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
என்பது வள்ளுவம். அடக்கம் அளவற்ற பெருமையை தருமாம்.
ஆணவம் கொள்ளாமல், அடக்கமாக இருந்து பழகுவோம்.
அரு. லெட்சுமணன் கோவை / சென்னை

No comments:

Post a Comment